திண்ணை கட்டுரைகள்

வயதாகியும் பொடியன்கள்

rajan3[1]

– அப்துல் கையூம்

நடுத்தர வயது ஆசாமிகளுக்கு ஒரு பொது அறிவு போட்டி வைத்து “இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றது எது?” என்று கேட்டால் சற்றும் தாமதிக்காமல் “கோபால் பல்பொடி” என்ற சரியான பதிலைச் சட்டென்றுக் கூறி விடுவார்கள்.

அதேபோன்று “காரம், மணம், குணம், நிறைந்தது எது?” என்று கேட்டால் T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி என்ற பதில் பொடிப்பொழுதில் மன்னிக்கவும் நொடிப்பொழுதில் நமக்கு கிடைத்துவிடும்.

யார் செய்த புண்ணியமோ மூக்குப் பொடி போடும் வழக்கம் சிறுகச் சிறுக ‘கோமா’ நிலமையை எட்டி விட்டது ஆமா!. இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே ‘பொடி’யன்கள் யாருமேயில்லை என்று மூக்கை உயர்த்திச் சொல்லலாம். வயதான பொடியன்களைத்தான் இன்று காண முடிகிறது.

பேருந்து வண்டியிலோ, தொடர்வண்டியிலோ பிரயாணம் செய்யும்போது மூ.பொ. (மூக்குப் பொடி) ஆசாமிகள் வந்து நம் பக்கத்தில் அமர்ந்து விட்டாலோ நம் பிரயாணம் அதோகதிதான். மூக்கின் உட்புறத்தில் அந்த கண்றாவி சமாச்சாரம் திட்டுத் திட்டாய் அப்பிக்கொண்டு இருப்பதை பார்க்கும்போது நாஞ்சில் பி.டி.சாமியின் கதை போன்று ஒரு திகில் உணர்வை நமக்கு அது ஏற்படுத்தும்.

மூக்கு இருப்பது சுவாசிப்பதற்காகவே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்களைப் பொறுத்தவரை அது வெறும் பொடி போடுவதற்காகவே என்று தப்புக்கணக்கு போட்டு வைத்திருக்கிறார்கள்.

மூ.பொ. ஆசாமியின் மூக்கை க்ளோசப்பில் 7 பிக்ஸல் டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து பார்த்தோமேயானால் நாம் வாழ்க்கையே வெறுத்துப் போய் விடுவோம்.

அம்மாடியோவ்.. ..! மூக்கா அது? ‘குணா’ குகை போலிருக்கும். பீரங்கியினுள் வெடி மருந்தை திணிப்பதைப்போல் அவர்கள் மூக்குப்பொடியை மூக்குக்குள் திணிக்கும்போது நமக்கு பீதியும் பேதியும் ஒருசேர கிளம்பிவிடும்.

‘ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் பொடிப்பிரியர்கள் நம் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னரே அந்த மூக்குத்தூள் துர்வாசனை நம் மூக்கைத் துளைத்து அவர்களது வருகையை நமக்கு அறிவித்து விடும்.

ஒருகாலத்தில் ‘பொடி’ என்ற பெயரே அலர்ஜி ஆகிப்போய் இட்லிப்பொடி, காரப்பொடி, ஓமப்பொடி சாப்பிடுவதைகூட நான் நிறுத்திவிட்டிருந்தேன். தொண்டரடி பொடி ஆழ்வாரின் கவிதையை படிப்பதைக்கூட தவிர்த்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

எங்களூர் கணக்கு வாத்தியார் சம்பந்தம் சார் பொடி போடும் பழக்கமுடையவர். அவர் தும்மினால் மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் சாக்பீஸ், டஸ்டர், ஸ்கேல் உட்பட எல்லாமே அதிரும். அக்காலத்தில் பம்மல் சம்பந்த முதலியாரின் பெயர் மிகவும் பிரசித்திப் பெற்றிருந்த நேரம். பசங்களெல்லாம் சேர்ந்து வாத்தியாருக்கு வைத்த பட்டப் பெயரோ ‘தும்மல் சம்பந்தம்’.

‘பொடி’வைத்து பேசுபவர்களையாவது நாம் மன்னித்து விடலாம். ஆனால் பொடி போட்டு பேசுபவர்களை மன்னிக்கவே கூடாது. (இந்த புதுமொழியை “Quotable Quotes” –ஆக யாராவது தங்கள் வலைப்பதிவில் சேர்த்தாலும் எனக்கு ஆட்சேபணை எதுவும் இருக்கப்போவதில்லை)

நான் ‘பொடி’ப்பயலாக இருந்த காலத்தில், மூ.பொ.ஆசாமிகள் இருவருக்கிடையில் உட்கார்ந்து ரயில் பிரயாணம் செய்த அந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் கூட எனக்கு தும்மல் வந்து விடுகிறது.

ரயில் பெட்டியில், முதலாம் ஆசாமி பொடி மட்டையை பிரித்தபோதே, அதிலிருந்து சில துகள்கள், சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியின் உபயத்தால் சீறிப் பாய்ந்து வந்து என் மூக்கைப் பதம் பார்த்தது.

ஆ.. .. .. அச்.. ச்ச்சு!

என் கண்களில் நீரை வரவழைத்த அந்த காட்டுத்தும்மலை இவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்கள் காதுக்கு அது ஒரு இனிமையான கானமாக இருந்திருக்குமோ என்னவோ எனக்குத் தெரியாது.

பரத நாட்டியத்தில் பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து முத்திரை காண்பிப்பது போல ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை எடுத்து கையிலே வைத்துக் கொண்டார் அந்த நபர். பேருக்குத்தான் ஒரு சிட்டிகை ஆனால் அதில் ஒரு நான்கு சிட்டிகைக்குரிய கொள்ளளவு தாராளமாகவே இருந்தது.

மனுஷன் சிட்டிகையை கையில் எடுத்ததுதான் எடுத்தார் மூக்கில் திணித்துத் தொலைய வேண்டியதுதானே? ஊ..கும். அப்போதுதான் அவருக்கு சுவராஸ்யமாக ஏதாவது பேச்சைத் துவங்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும் போலும்.

“என்ன ஓய்.. பேசாம இருக்குறீர்?” என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ஊர்வம்பு சம்பாஷணை தொடர்ந்து எடுத்த சிட்டிகையை இன்னும் மூக்குக் குகைக்குள் நுழைத்தபாடில்லை.

இரண்டு மூன்று தடவை கையை உதறிவிட்டு ஒருவழியாக வெடிமருந்தை சாரி பொடிமருந்தை அந்த பீரங்கி மூக்குத் துவாரத்தில் ஏற்றியாகி விட்டது. உதறியபோதும் சில துகள்கள் காற்றில் பரவி மீண்டும் எனக்கு

ஆ.. .. .. அச்.. ச்.. .. சூ… உ. ..”

மூக்கே கழன்று விழுந்து விடும் போலிருந்தது.

உண்மையான பீதி எனக்கு இப்போதுதான் ஏற்பட்டது. “நேத்து சேஷாத்திரி ஆத்துலே..” ன்னு ஆரம்பிச்சவர் மூக்கு மடலை விடைத்துக் கொண்டு வாயையும் மூட இயலாதவண்ணம், பாதிக் கண்களை மூடிக்கொண்டு எந்த நேரத்தில் தும்முவாரோ என்ற சஸ்பென்ஸ் ஒருபுறம், மனுஷன் சீக்கிரம் தும்மித் தொலைத்தாவது நமக்கு நிம்மதி கிடைக்குமே என்ற கவலை மறுபுறம் என்னை ஆட்டிப் படைத்தது.

இப்போது நான் எதிர்பார்த்தபடியே அந்த பொக்ரான் தும்மல் படுபயங்கர சப்தத்துடன் வெடித்தது. என் கையிலிருந்த பத்திரிக்கையில் திட்டுத்திட்டாக அந்த மூக்குப் பொடி சமாச்சாரத்தின் மழைச்சாரல் வேறு.

ஒருத்தர் பொடி போட்டால் மற்றவருக்கும் மூடு வந்து விடும் போலும்.

எதிரில் அமர்ந்திருந்த இவரது பார்ட்னர் ஜிப்பாவில் கையை விட்டு ஒரு வெள்ளி டப்பாவை எடுத்தார். “இந்த வீணாப்போன சமாச்சாரத்தை பத்திரப்படுத்துவதற்கு வெள்ளி டப்பா ஒரு கேடா?” என்று என் மனதுக்குள் திட்டித் தீர்த்துக் கொண்டேன்.

பித்தளை, வெள்ளி, தங்கம், மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு, காண்டாமிருகக் கொம்பு, ஒட்டகை எலும்பு, யானைத்தந்தம் போன்றவற்றால் செய்யப்பட்ட அலங்கார பொடிடப்பிகளில்கூட இந்த மேற்படி பொக்கிஷத்தை இருப்பு வைத்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இரண்டாவது நபரும் பொடி டப்பாவை கையிலே ஏந்தி அவரது ‘மிஷனு’க்கு ஆயத்தம் ஆக, வரப்போகிற பூகம்பத்தை ஊகித்து அங்கிருந்து நைஸாக நழுவி வேறிடத்திற்கு இடம் பெயர்ந்தேன். பொடியனாக இருக்கையில் என் மூக்கில் ஏறிய அந்த கார பொடிநெடி இன்றளவும் என்நாசி நரம்புகளில் படிந்திருக்கிறது.

இசைக் கலைஞர்களுக்கும் மூக்குப் பொடிக்கும் இடையேயான உறவு பிரசித்திப் பெற்றது. மனம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யர், பட்டணம் சுப்ரமண்ய ஐயர், அரியக்குடி இராமனுஜ ஐயங்கார், நாகஸ்வரச் சக்கரவர்த்தி இராஜரத்னம் பிள்ளை, செம்மங்குடி சீனிவாச ஐயர், ‘சங்கீத கலாநிதி’ டி.எம்.தியாகராஜன் என்று மூ.பொ. ஆசாமிகளின் பட்டியல் அனுமார் வாலைப்போல் நீண்டுக் கொண்டே போகிறது.

மூச்சு விடாமல் வேண்டுமானாலும் கூட இவர்கள் இருந்து விடுவார்கள் ஆனால் மூக்குப்பொடி போடாமலிருந்தால் மூர்ச்சையாகி விடுவார்கள்.

“ஒயின் அருந்துவது எப்படி?” என்று பிரஞ்சுக்காரர் ஒருவர் ஒரு பத்தகம் எழுதி வைத்திருக்கிறார். ஒயின் பாட்டிலை எப்படி திறப்பது என்பதற்கே தனியாக ஒரு அத்தியாயம். கோப்பைக்குள் ஒயினை மெதுமெதுவாக ஊற்ற வேண்டுமாம், ஊற்றியபின் அதேயே கொஞ்ச நேரம் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமாம், பிறகு அதனை முகர்ந்து பார்த்து அந்த நறுமணத்தை(?) மனதுக்குள் அசை போட வேண்டுமாம், அதன்பின்னர் பிறகு கோப்பையை மெதுவாக வாயருகே கொண்டுச்சென்று லேசாக உறிஞ்ச வேண்டுமாம், உறிஞ்சியதை வாயில் வைத்துக் கொண்டு முழுங்காதவண்ணம் அதன் சுவையை அனுபவிக்க வேண்டுமாம், அதைத் தொடர்ந்து சொட்டு சொட்டாக தொண்டைக்குள் லயித்த மேனிக்காய் முழுங்க வேண்டுமாம் – இப்படியாக ஒரு ஆராய்ச்சி நூல் எழுதி வைத்திருக்கிறார்.

மூக்குப்பொடி போடுபவர்களும் இதுபோன்று சில வரைமுறைகளை சொல்லிவைத்தாற்போல் அவர்களுக்குள்ளாகவே வகுத்து வைத்திருக்கிறார்கள். பொடி ஆசாமிகள் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான கோட்பாடுகள்/ வழிமுறைகள்/ நடைமுறை பழக்கங்கள் இருப்பதைக் காண முடிகிறது. “பொடி போடுவது எப்படி?” என்ற ஆய்வு நூலை எந்த பிரகஸ்பதியாவது இதற்குமுன் எழுதி வைத்துப் போயிருப்பாரோ என்னவோ?

பொடி மட்டையை சூசகமாக திறப்பது; அதிலிருந்து ஒரு சிட்டிகையை பதுசாக கையிலெடுப்பது; இரு விரல்களுக்கிடையில் இறுக்கமாக வைத்துக் கொண்டு சில மணித்துளிகள் உரையாடுவது; பிறகு சர்..ரென்று மூக்கால் உறிஞ்சுவது; கையை உதறுவது – இவை யாவற்றிலும் ஒரு நளினம்/ தொழில் நுட்பம்/ லாவகம் இவர்கள் கையாள்வதை நாம் பார்க்கலாம்.

‘நாசிகா சூர்ண’த்தை மூக்குக்குள் திணித்து மூக்கைத் தடவி விட்டுக் கொள்ளும் அவர்களது பாணியே ஒரு பிரத்தியேக ஸ்டைல். சிலபேர்கள் கைக்குட்டையை இரண்டு ஓரத்திலும் பிடித்துக் கொண்டு ஷூ பாலிஷ் செய்வதுபோல் மூக்கை பாலிஷ் செய்துக் கொள்ளும் யுக்தியைக் கடைபிடிப்பார்கள். அந்த மூக்குக்கு மட்டும் வாயிருந்தால் ‘ஓ..வென்று” கதறியிருக்கும்.

இந்த மூக்குப்பொடி சமாச்சாரம் சில நூற்றாண்டுகளாக நம் மக்களிடையே இருந்து வந்திருக்கிறது.

பேரரசர் அக்பர் ஒருமுறை அரசவையில் “பிறருக்கு எதையேனும் வழங்கும்போது கொடுப்பவர் கை உயர்ந்தும், பெறுபவர் கை தாழ்ந்தும் இருப்பதுதான் வழக்கம்” என்று கூற “எல்லா நேரத்திலும் இப்படி இருப்பதில்லை” என்ற பீர்பால் மூக்கை நுழைக்க அவையோர் மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள்.

”மூக்குப் பொடி கொடுப்பவரின் கை கீழாகவும், அதைப் பெற்றுக் கொள்பவர் கை மேலாகவும் இருக்கும்” என்று பீர்பால் மேலும் விளக்கிக் கூற பேரரசர் அக்பர் மூக்கின் மேல் விரல்வைத்து அவரது அபார அறிவுத்திறனை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்தாராம்.

எனது ஒண்ணு விட்ட கொள்ளுத் தாத்தா ஒரு பொடிப்பிரியர். பொடியின்றி நொடிப்பொழுதும் இருக்க மாட்டார். “பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லோர் இடிவிழுந்து சாவார்” என்று புதுக்குறள் வேறு சொல்வார்.

நான் பொடியனாக இருந்த காலத்தில் அவரது பொடி டப்பாவை எடுத்து ஒளித்து வைத்துவிட என் கன்னத்தில் ஒண்ணு விட்டதை மறக்கவே முடியாது, ‘ஒண்ணு விட்ட கொள்ளுத் தாத்தா’ என்ற உறவை மெய்ப்பித்துக் காட்டியவர் அவர்.

மாலை நேரத்தில் வாக்கிங் போவதைக்கூட “பொடி நடையாக போய்விட்டு வருகிறேன்” என்றுதான் சூசகமாகச் சொல்வார். அந்த பொடிநடையின் போது எத்தனை தடவை பொடி ஏற்றுவார் என்பது எனக்குத்தான் தெரியும்.

N.V.S சண்முகம் பட்டணம் பொடி – இந்த தயாரிப்புக்கு இவர்தான் நியமிக்கப்படாத, அதிகாரப்பூர்வமில்லாத Brand Ambassador. காரணம் அவரிடமிருந்த அந்த மஞ்சள் பை, தகர டப்பா, ஹேண்ட்பேக் எல்லாவற்றிலும் இந்த விளம்பரத்தைத் தாங்கிக்கொண்டு நடமாடும் விளம்பரப்பலகையாக நகரை வலம் வந்துக் கொண்டிருந்தார்.

தன்னிடம் ஓசிப்பொடி கேட்கும் ஆசாமிகளுக்கு கொஞ்சம் கூட மூக்கைச் சுழிக்காமல் அள்ளி அள்ளி கொடுக்கும் பொடிவள்ளல் அவர். பவ்யமாக ஓசிப்பொடி வாங்கிகொண்டு தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டிக் கொண்டு போகும் அந்த ஓஸிபீஸா ஆசாமிகளைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

ஒரு சிலபேர்கள் நமது பக்கத்திலேயே அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார்கள். அவர் எப்போது பொடியை கையிலெடுத்தார், எப்படி போட்டார் என்றே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அந்த வாசனை அவரை எட்டப்பனாக காட்டிக் கொடுத்து விடும்.

அறிஞர் அண்ணா இவ்விஷயத்தில் பலே கில்லாடி என்று சொல்வார்கள். மேடையில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே யாரும் அறியாத வண்ணம் தனது காரியத்தை கச்சிதமாக முடித்து விடுவாராம்.

சைனஸ், மூக்கடைப்பு, நீர்க்கோர்வை, மண்டைச்சளி இதுபோன்ற உபாதைகளுக்கு இது நல்ல மருந்து என்பது மூ,பொ. ஆசாமிகளின் அசையாத நம்பிக்கை.

புகையிலை, சுண்ணாம்பு, நெய் இவைகளின் ஆபத்தான கலவைதான் இந்த மூக்குப்பொடி. சுண்ணாம்பு = காரம், நெய் = மணம், புகையிலை = போதைகுணம். இதனால்தான் இது காரம், மணம், குணம் நிறைந்ததாக விளம்பரம் செய்கிறார்கள்.

குடிப்பழக்கத்திற்கும் பொடிப்பழக்கத்திற்கும் அதிக வேறுபாடு கிடையாது. ஒருவித சிலிர்ப்புத்தன்மையும், மூளை நரம்புகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதாகவும் ஒரு மாயை. அவ்வளவுதான். இந்த கொடிய பழக்கத்தினால் இரத்த அழுத்தம், புற்று நோய், பக்கவாதம், நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் உண்மை.

ஒருகாலத்தில் புகையிலைதாசர்களுக்கும் மூக்குப்பொடிதாசர்களுக்கும் இடையே “எது சிறந்தது?” என்ற போட்டா போட்டி நடந்திருக்கிறது. திருப்பதி வெங்கடாசலபதி காட்டும் அபயக்கரம் ‘உள்ளங்கை அகலத்து புகையிலையை போடுங்கள்’ என்று அட்வைஸ் கொடுப்பதாக புகையிலைப் பிரியர்கள் கொக்கரிக்க, தட்சிணாமூர்த்தி தன் வலதுகரத்தால் காட்டும் சின்முத்திரை மூக்குப்பொடி போட அட்வைஸ் கொடுப்பதாக மூ.பொ. பிரியர்கள் எசப்பாட்டுப் பாட தெய்வங்களை விளம்பர மாடல்கள் ரேஞ்சுக்கு களமிறக்கி விட்டார்கள்.

இந்த போட்டியை இவர்கள் இலக்கியத்திலும் காட்டியிருந்தால் தேவலாமே என்று நினைக்கத் தோன்றுகிறது. “புகையிலை விடு தூது” என்ற நூலைப்போன்று “மூக்குப்பொடி விடு தூது” என்று ஏதாவது இவர்கள் எழுதி வைத்திருந்தாலாவது தமிழுக்கு கிடைத்த தூது இலக்கியங்களின் எண்ணிக்கை ஒன்று கூடிப் போயிருக்கும்.

நம்மவர்கள் உற்சாகத்திற்கு நெப்போலியனை ஏற்றிக்கொள்கிறார்கள். ஆனால் அந்த மாவீரன் நெப்போலியனே உற்சாகத்திற்கு மூக்குப்பொடியை ஏற்றிக்கொண்டதாக சரித்திரக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.

மூன்றாவது ஜார்ஜ் மன்னரின் மனைவி அரசி சார்லட், போப் பெனடிக்ட் XII, போன்ற பிரபலங்கள் கூட மூக்குப்பொடிக்கு அடிமையாக இருந்திருக்கிறார்கள்.

இந்த புள்ளி விவரங்கள் மூ.பொ.ஆசாமிகளின் கண்களில் படாமலிருப்பது நலம். ஏனென்றால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு பொடிமட்டையை மடியில் கட்டிக்கொண்டு, கைக்குட்டையும் கையுமாக இவர்கள் அலையக் கூடும்.

கைக்குட்டை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. மூ.பொ.ஆசாமிகள் பயன்படுத்தும் கைக்குட்டையைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறா விட்டால் இந்த கட்டுரையே பூர்த்தியாகாது.

8” x 8” சைஸில் ஒரு தடிமனான துணியில் பிரத்யேகமாக தைக்கப்பட்ட கைக்குட்டை இவர்கள் வசமிருக்கும். மூக்குப்பொடியைச் சிந்தி சிந்தி அதன் ஒரிஜினல் கலர் மாறி மரக்கலராய் அது உருமாறி போயிருக்கும், திட்டுத் திட்டாய் ஆங்காங்கே இலங்கை வரைப்படம் போன்று நனைவுச் சின்னங்கள் பதிந்திருக்கும்.

ஆ.. .. .. அச் .. .. ச்.. ச்.. ச்.. சூ .. ஊ. .. ஊ.. ஊ.. ஊ..

 நன்றி : திண்ணை/ Thursday May 28, 2009

ஷாஜகானும் மும்தாஜும்

shahjahan-mumtajmahal

– அப்துல் கையூம் (திண்ணை 20.03.09)

இந்தியாவிலிருந்து பிரான்சு போகிற வழியில் டிரான்ஸிட் பயணியாக பஹ்ரைன் வந்த என் நண்பனை அழைத்துக் கொண்டு காரில் ஒரு ரவுண்டு புறப்பட்டேன். பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கில் வண்டியை நிறுத்தியபோது “மும்தாஜ், ஜய்யித் –  எது வேண்டும்?” என்று பங்க் ஊழியர் வினவ, நான் “மும்தாஜ்”  என்று என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். இந்த உரையாடலைக் கண்காணித்த நண்பன் என்னைப் பார்த்த பார்வையே சரியில்லை.

“சினிமா வட்டாரத்துலே மட்டுமில்லே, இங்கே கூட மும்தாஜ் மேடம் எவ்ளோ பிரபலமா இருக்காங்க பாத்தியா?” என்று மேலும் நான் கலாய்க்க, ‘பெக்கே பெக்கே’ என்று பேய்முழி முழித்த அவனிடம் “மும்தாஜ் என்றால் உயர்தர பெட்ரோல் வகை; ஜய்யித் என்றால் சற்று மட்ட ரகம்”;  என்று விளக்கம் தந்த பிறகுதான் குழப்பம் தீர்ந்து சகஜ நிலைக்கு திரும்பி வந்தான் அவன்.

“ஷாஜஹான் மும்தாஜுக்காக தாஜ்மஹாலைக் கட்டினான். நீங்க மும்தாஜுக்காக அட்லீஸ்ட் ஒரு அஞ்சு மீட்டர் புடவையாவது கட்டி விடக் கூடாதா?” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ஒருமுறை அடித்த ஜோக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன் நான்.

“அந்த அம்மாவுக்கு துணியைக் கொஞ்சம் போர்த்தி விடுங்கப்பா” என்று திரையுலக இயக்குனர்களுக்கு அட்வைஸ் கொடுக்கிற சாக்கில், பாவம் எப்பவோ இறந்துப் போன ஷாஜகான், மும்தாஜ் இவர்களுடைய தலையையும் போட்டு உருட்டுகிறார்களே என்று அவர்களுக்காக பரிதாபப்பட்டேன்.

காதலனும் காதலியும் கடற்கரை மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம். “கண்ணே உனக்காக தாஜ்மகால் கூட நான் கட்டத் தயார்” என்று டயலாக் பேசினானாம் அவன். “தாஜ்மகால் கட்டுறது அப்புறமா வச்சுக்குங்க. மொதல்லே என் கழுத்துலே தாலியைக் கட்டுறதுக்கு ஒரு வழி பண்ணுங்க” என்றாளாம் அவள்.

ஏ.ஆர்.ரகுமான் பாட்டு பாடுவதற்கு ‘தாஜ்மகால்’ ஒரு பாடுபொருளாக பயன்பட்டிருப்பதைப் போல, இந்த காதலிக்கு ‘தாஜ்மகால்’ தாலி கட்டச் சொல்வதற்கு உதாரணமாக பயன்பட்டிருக்கிறது. ‘காமெடி டிராக்’ மற்றும் ‘ஜோக்’ எழுதுபவர்கள்கூட ‘ஆ.. ஊ..’ என்றால் தாஜ்மகாலை வம்புக்கிழுத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஷாஜகான் – மும்தாஜ் காதல் ஜோடியின் ஓவியச்சித்திரத்தை கண்ணுற்றபோது  “எங்களை வச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே” என்று பரிதாபமா கெஞ்சுவது போலிருந்தது.   

‘ஷாஜகான், மும்தாஜ் இவர்களைப் பற்றி சிறு குறிப்பு வரைக’ என்று வினாத்தாளில் வந்த கேள்விக்கு, “ஷாஜகானைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை ஆனால் மும்தாஜுக்கு இப்பொழுதுதான் மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது” என்று பதில் எழுதினானாம் ஒரு கிராதக மாணவன்.

 “ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார். சோழ மன்னர் எதைக் கட்டினார்?” என்று வகுப்பிலே ஆசிரியர் கேட்டதற்கு “சோழ மன்னர் வேட்டி கட்டினார் சார்.” என்ற சொன்ன மாணவனின் குசும்பை என்னவென்றுச் சொல்வது?

அது மட்டுமா? “தாஜ்மகாலை கட்டியது யார்?” என்று வரலாற்றாசிரியர் கேட்டிருக்கிறார். “நான் பொறக்கிறதுக்கு முன்னாடி நடந்த விஷயத்தையெல்லாம் நோண்டி நோண்டி கேட்டா எனக்கெப்படி சார் தெரியும்?” என்று கோபத்துடன் பதில் சொன்னானாம் மாணவன்.

“இதுகூட ஒனக்குத் தெரியலியே பெஞ்ச் மேலே ஏறி நில்லு”ன்னு ஆசிரியர் அந்த மாணவனைக் கண்டிக்க, பெஞ்ச் மேலே ஏறி நின்ற மாணவன் ஜன்னலை எட்டிப்பார்த்து விட்டு “இப்பவும் தெரியலே சார்” என்று கூறி இருக்கிறான். இந்த ‘லொள்ளு’வை என்னென்பது?

 “தாஜ்மகாலைக் கட்டியது யார்?” என்ற இதே ரீதியிலான மற்றொரு கேள்விக்கு “கொத்தனார்” என்று நெத்தியடி பதிலைக் கூறி வாத்தியாரையே பாடாய் படுத்தினானாம் இன்னொரு மாணவன். “ஏன் கேட்டோம்?” என்று நொந்து போயிருப்பார் அந்த ஆசிரியர் பாவம்.

இதை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நான் அண்மையில் பார்த்த தொலைக்காட்சி விளம்பரம்.  99 ஏக்கர்ஸ்.காம் ரியல் எஸ்டேட்காரர்களின் விளம்பரப் படமிது. (பார்க்க : http://www.youtube.com/watch?v=1-gsMqNCasc )

ஷாஜகானும் மும்தாஜும் ‘குடுகுடு’ வயதை எட்டி பழுத்த பழமாகி விட்டார்கள். பாவம், இன்னும் ஷாஜகானுக்கு தாஜ்மகால் எழுப்புவதற்கு பொருத்தமான காலிநிலம் கிடைத்த பாடில்லை.

“பேகம்! கவலைப்படாதே. எப்பாடு பட்டாவது தாஜ்மகால் உனக்காக அவசியம் கட்டுவேன். இது ஷாஜகானின் வாக்கு” என்று மன்னர் ஆறுதல் கூற;

“ஆமா! 400 வருஷமாக இதே பல்லவியைத்தான் பாடி புருடா விட்டுக்கிட்டு இருக்கீங்க. இதுவரை ஒண்ணுமே செய்தபாடில்லே” என்று அலுத்துக் கொள்கிறார் மும்தாஜ்.

“ ஹூ..ம். கட்டத்தான் நினக்கிறேன். நல்ல இடம் கிடைத்தால்தானே? நான் என்ன செய்வேன்” என்று தன் புலம்பலை வெளியிட்டு;

“போங்க! எப்படியாவது கட்டடம் கட்டுவதற்கு உடனே ஒரு நல்ல இடத்தை தேடிப்பிடித்து கொண்டு சீக்கிரம் வாங்க!” – ‘லொக் லொக்’ என்று இருமிக் கொண்டே தன் பணியாட்களுக்கு உத்தரவிடுகிறார் பேரரசர் ஷாஜகான்.

சற்று நேரத்திற்குள், “பாபர் ரோடு, ஹுமாயூன் ரோடு, அக்பர் ரோடு, ஜஹாங்கீர் ரோடு, அனார்கலி ரோடு, இங்கெல்லாம் காலி நிலம் ரெடியாக இருக்கிறது மன்னா” என்று கூறி லேப்டாப் சகிதம் ரியல் எஸ்டேட்காரர்கள் வரைபடத்தைக் கொண்டுவந்து காட்டுகிறார்கள்”

அதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை. “தாஜ்மகால் கட்டுறதுக்கு பைனான்ஸ் வேணுமானாலும் ஏற்பாடு செய்து தர்றோம் மன்னா” என்று அவருக்கு ஆலோசனை தருகிறார்கள். கஷ்டகாலம்டா சாமி.

நல்லவேளை இந்த காமெடிக் கூத்தை எல்லாம் காண்பதற்கு அந்த மாமன்னன் இன்று நம்மோடு இல்லை. இருந்திருந்தால் “உலகமே போற்றுகின்ற அதிசயத்தை கட்டுனேன் பாருங்க; எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்” என்று புலம்பித் தள்ளியிருப்பார்.

ஷாஜகானைக் காட்டிலும் மும்தாஜை நாமெல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக அசைவப்பிரியர்கள் அவரை மறக்கவே கூடாது. மும்தாஜ் ஒரு பேரழகி என்று சரித்திரம் போற்றுவதினாலா? ஊஹூம். நிச்சயமாக அதனால் இல்லை.

அசைவ உணவு வகைகளிலேயே தலைச்சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுவது ‘பிரியாணி’ என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நாவுக்கு இதமாக  இல்லத்தரசி சமைத்துவிட்டாலே ‘இதை தயாரித்த விரல்களுக்கு மோதிரம்தான் செய்துபோட வேண்டும்’ என்று டயலாக் அடிப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

பாரெல்லாம் போற்றக்கூடிய இந்த சுவைமிகு உணவு வகையை கண்டு பிடித்தது யார் தெரியுமா? பேரரசி மும்தாஜேதான். இந்த ஒரு கண்டுபிடிப்புக்காகவே, இந்த ‘சூப்பர் சமையல்காரி’யின் நினைவாக தாராளமாக தாஜ்மகாலை கட்டலாம். உலகளவில், பிரியாணியின் பெருமையை அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும்? அரபிகள் பிரியாணி என்றால் உயிரையே விட்டு விடுகிறார்கள். ஹைதரபாத் மன்னர் நிஜாம் சமையலறையில் மட்டும் 49 வகையான பிரியாணி தயாரித்து பரிமாறப்படுமாம்.

நளன் நினைவாக ‘நளபாகம்’ என்று கூறுவதைப்போல் மும்தாஜ் பேகம்  நினவாக ‘மும்தாஜ்பாகம்’ என்று புகழ்மாலை பொழிந்தால் என்ன?

நம் சினிமாத்துறையினர்கள்கூட “ஷாஜகான்” என்றும் “தாஜ்மகால்” என்றும் திரைப்படங்களுக்கு தலைப்பிட்டு விமோசனம் தேடிக் கொண்டார்கள்.  இன்னும் “மும்தாஜ்” பெயரில் படம் எடுக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த மேட்டர் டி.ராஜேந்தர் காதில் தப்பித் தவறி விழுமேயானால் மும்தாஜையே கதாநாயகியாக்கி அவரே இணைந்து ஆடிப்பாடி படத்தையும் வெளியிட்டு விடுவார்.

நம் டைமண்டு கவிஞர் “50 KG தாஜ்மகால் எனக்கே எனக்கா?” என்று எழுதினாலும் எழுதினார், எனக்கு அபிஷேக் பச்சனை திரையில் பார்க்கும் போதெல்லாம் ஏனோ தெரியவில்லை ஷாஜகான் ஞாபகம்தான் வருகிறது. 50 KG தாஜ்மகாலை தனதாக்கிக் கொண்டவர் அவர்தானே?

வீட்டுத்தரைக்கு ‘டைல்ஸ்’ போடுவதா அல்லது ‘மார்பிள்ஸ்’ போடுவதா என்று முடிவெடுக்கத் திணறியபோது கடை சேல்ஸ்மேன் (அவர் பெயரும் ஷாஜகான்தான்)  சலவைக்கற்களைப் பற்றி ஒரு பெரிய விளக்கப்பாடம் நடத்தி எனக்கு மூளைச் சலவை செய்தார். ஒரே மாதிரியான ரேகை பொருந்தி வருவது போல் ஒரே பாறையிலிருந்து எடுக்கப்பட்ட சலவைக்கற்கள் விலை சற்று அதிகமாம்.  முழு வெள்ளை நிறத்தில் காணப்பட்ட உயர்தர சலவைக்கற்களின் விலை கன்னாபின்னாவென்று இருந்தது.

அன்றைய தினம் ஷாஜகான் (சேல்ஸ்மேன் அல்ல; தாஜ்மகாலைக் கட்டிய அதே பேர்வழிதான்) என்னிடமிருந்து வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஊரு உலகத்துலே இருக்குற எல்லா வெள்ளைக் கற்களையும் திரட்டி தன் வீட்டுக்காரிக்காக மணிமண்டபம் கட்டி டிமாண்ட் ஏற்படுத்தி விட்டு விட்டாரே என்று அவரை மனதுக்குள் திட்டித் தீர்த்து விட்டேன்.

இவ்வேளையில், கூத்தாநல்லூர் ஈன்ற கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் அவர்கள் 1958-ஆம் வருடம் ‘மணிச்சரம்’ என்ற கவிதைத் தொகுப்பில் எழுதிய ‘தாஜ்மஹல்’ என்ற கவின்மிகு கவிதை என் நினைவுக்கு வந்தது.

“சிற்பிகளில் தேர்ந்தவரைத் திணற வைத்து,
சிந்தனையில் தோய்ந்தவரைத் தெளிய வைத்து,
கற்பனையில் மிக்கவரைத் தெளிய வைத்து,
காவியஞ்செய் புலவர்களை வியக்க வைத்து,
அற்புதத்தின் அற்புதமாய் உயர்ந்து நிற்கும்
அழகுமிகு தாஜ்மஹலை நெருங்க லானோம்;
‘நற்கனவு இன்றைக்கே பலித்த’தென்று
நாயகியாள் நவின்றிட்டாள் ‘ஆமாம்’ என்றேன்”

தன் இல்லத்துணைவியுடன் தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்ததாகக் கூறும் அந்தக் கவிதை மிகவும் யதார்த்தமாக இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அதை அவர் எழுதும்போது (1958) அவருக்கு மனைவியே இல்லை என்பது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அவர் தாஜ்மகாலை நேரில் போய் காணவே இல்லை என்பதுதான் சுவராஸ்யம்.

“தாஜ்மகால் நிறைவாழ்வு வாழ்ந்த ஒரு தம்பதியரின் (மும்தாஜ் – ஷாஜகான்) நினைவுச்சின்னம். அதைக் காணச் செல்வோரும் தம்பதி சமேதராகவே செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒரு மனைவியையும் துணைக்கு அழைத்துக் கொள்ள வேண்டிய அவசிய மேற்பட்டது” என்று சாரணபாஸ்கரனே 19 ஆண்டுகட்குப் பிறகு (1-1-1977) எழுதிய உரை ஒன்றில் இதைப்பற்றிய தன்னிலை விளக்கம் அளித்திருந்தார்.

பண்டு தொட்டு கண்டம் விட்டு கண்டம் வரும் பார்வையாளர்கள், அண்டம் புகழும் இந்த அதிசயத்தைக் கண்டு ‘ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்து தள்ளும் போது நாம் மட்டும் தண்டமாய் இன்னும் இதை பார்க்காமல் இருக்கிறோமே என்று எண்ணினேன்.

ஆண்டுதோறும் 25 லட்சம் பேர்கள் தாஜ்மகாலை காண்பதற்கு வருவதாக கருத்துக்கணிப்பு சொல்கிறது. இருபத்து லட்சத்து ஒண்ணாவது நபராக நானும் தாஜ்மகாலை பார்வையிட முடிவுச் செய்து, காதல் சின்னத்தை தனியாக காணச் செல்லுதல் உசிதமல்ல எனக் கருதி மனைவியையும் அழைத்துக் கொண்டு ஆக்ராவுக்குப் புறப்பட்டேன்.

சிப்பிக்குள் ஒளித்து வைத்திருக்கும் முத்தினைப் போல, செங்கல் மண்டபங்கள் சூழ்ந்த வளாகத்தினூடே வெள்ளை வெளேரென்று பிரமாண்டமாக காட்சி தந்தது அந்த உலக மகா அதிசயம். உள்ளே நுழைந்ததும் ஈசலாய் மொய்த்துக் கொண்டார்கள் கேமாரவும் கையுமாக சுற்றிய நபர்கள்.

தாஜ்மகாலின் நுழைவாயிலின் எதிரே நடுநாயகமாக வீற்றிருந்த அந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து பார்த்தேன். உலகத் தலைவர்கள் எத்தனைப்பேர்கள் அமர்ந்த சிம்மாசனம் இது என்று எண்ணிப் பார்த்தேன்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரப் இவர்கள் எல்லோரையும் இந்த இடத்தில் வைத்து நான்தான் படமெடுத்தேன் என்று ஒருவர் போட்டோ ஆல்பம் சகிதமாய் வந்து ஆதாரத்தைக் காட்ட “ஆஹா.. இவ்வளவு பிரபலமான புகைப்பட  வல்லுனரா இவர்?” என்று வியந்து திரும்புவதற்குள் இன்னும் நாலைந்து பேர்கள் அதே மாதிரியான போட்டோவை ஏந்திக் கொண்டு என்னை முற்றுகையிட நான் சற்று உஷாராகி விட்டேன்.

தாஜ்மகாலை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டுமா? தாஜ்மகாலின் மினாராவின் உயரத்துக்கு எம்பிக் குதிக்க வேண்டுமா? இரு விரல்களால் தாஜ்மகாலின் குவிமாடத்தை பிடித்து அலக்காகத் தூக்க வேண்டுமா? எப்படி வேண்டுமானாலும் எடுத்து தருகிறோம் போட்டோ என்றார்கள்.

எனக்கும் இதுமாதிரி போட்டோவிலாவது தாஜ்மகால் மேலிருந்து குதித்து ஸ்டண்ட் அடித்து பார்க்கலாமே என்ற ஆசை வந்தது. (உண்மையிலேயே குதித்தால் கை, கால்கள் என்னாவது?)

“மொதல்லே இந்த இடத்துலேந்து நகருங்க . நம்மோட டிஜிட்டல் கேமராவுலே எடுத்தாலே போதுமானது” என்று என் மனைவி என்னை அன்பாய் துரத்த,  அந்த புகைப்பட வல்லுனர்களிடமிருந்து என்னை விடுவித்துக் கொண்டு நுழைவாயிலிருந்து நகர்ந்தேன். தாஜ்மகால் மேலிருந்து ‘டைவ்’ அடிக்கிற என்னாசை நிறைவேறாமலேயே போனது,

“முகலாய சாம்ராஜ்ய தீபமே – சிரித்த
முகத்தோடு நினவில் கொஞ்சும் தீபமே
மும்தாஜே முத்தே என் பேகமே – பேசும்
முழுமதியே என் இதய கீதமே”

என்ற மருதகாசியின் அமரகீதம் சிதம்பரம் ஜெயராமனின் குரலில் என் காதோரத்தில் அசரீரியாய் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

“பணம் படைத்தவன் படத்துலே எம்.ஜி.ஆரும், கே.ஆர்.விஜயாவும் முகலாய உடையிலே  சுத்தி சுத்திவந்து ஆடிப்பாடினது இந்த கோபுரத்து மாடத்து மேலேதான்” என்று என் மனைவியிடம் தமாஸ் பண்ணினேன்.

“புரியாம பேசாதீங்க. அதெல்லாம் கிராபிக்ஸ் வேலை” என்று அவள் எனக்கு சீரியஸாக பதிலளிக்க;  புத்திசாலித்தனமாக ஜோக் அடிப்பதாக நினைத்துக் கொண்டு இப்படி கிறுக்குப் பட்டம் வாங்கிக் கொண்டோமே என்று எனக்கு நானே நொந்துக் கொண்டேன். 

எங்களோடு சேர்ந்து சுற்றிய ஒரு கிண்டல் பேர்வழி  தன் மனைவியிடம் கமெண்ட் அடித்துக் கொண்டு வந்தார். “கிரிமினல் வேஸ்ட்; கிரிமினல் வேஸ்ட்” என்று பொறிந்துத் தள்ளிய அவருடைய உரையாடலை ஆர்வத்துடன் ஒட்டுக் கேட்டேன்.

“சேச்சே.. பொண்டாட்டிக்காக அரசாங்க பணத்தை எடுத்து இந்த மாதிரி கிரிமினல் வேஸ்ட் பண்ணியிருக்கானே இந்த ஆளு” என்று தன் மனைவியிடம் ஷாஜகானுக்கு டோஸ் விட்டுக் கொண்டிருந்தார்.

“தாஜ்மகால் நித்தியத்துவத்தின் கன்னத்தில் தயங்கி நிற்கும் ஒரு துளி கண்ணீர்” என்றாராம் தாடிக்கவிஞர் தாகூர். எது எப்படியோ, ‘அது சோகத்தின் வெளிப்பாடு’ என்ற எண்ணம் மெல்ல மெல்ல மறைந்து, ஷாஜகானையும், மும்தாஜையும் வைத்து நாம் இப்போது செமையாக காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.

அப்துல் கையூம்

நன்றி : திண்ணை 20.03.09