சொந்த அனுபவங்கள்

கண்ணதாசன் நினைவுகள் – பாகம் 2

%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d

எங்களுடன் ஒன்றாகத் தங்கி படித்துக் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசனின் செல்வப் புதல்வன் கலைவாணனுக்கு ஏனோ இந்த ஹாஸ்டல் வாழ்க்கை அறவே பிடிக்கவில்லை. இதனால் படிப்பிலும் அவனால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.

காரணம், சுதந்திரப் பறவையாக தன் வீட்டில் சுற்றித் திரிந்து வாழ்க்கையை தன் குடும்பத்தாருடனும், உடன்பிறந்தோருடனும் ‘ஜாலியாக’ அனுபவித்து வந்த அவன் இந்த ஹாஸ்டல் வாழ்க்கையை சிறைவாழ்க்கையாக எண்ணி கலக்குமுற்றான்.

ஒருநாள் காலை வேளையில், ஏற்கனவே அவன் திட்டமிட்டிருந்தபடி சுவரேறிக் குதித்து பள்ளி வளாகத்திலிருந்து வெளியே ஓடிவிட்டான். “தோள் கொடுப்பான் தோழன்” என்பார்கள். அதுபோல முதுகைக் கொடுத்து அதன் மீது ஏறி அவனை தப்பிக்க துணை புரிந்தவன் நானல்ல; என் இன்னொரு நண்பன்.

அச்சமயத்தில் அண்ணா உயிரியல் பூங்காவெல்லாம் வண்டலூரில் கிடையாது. ஓட்டேரி நாற்சந்தியில் ஒரே ஒரு கீற்றுக் கொட்டகை டீக்கடை மாத்திரம் இருக்கும். தாம்பரம் செல்வதற்கு ஏகப்பட்ட மண் லாரிகள் அவ்வழியே போய்க்கொண்டிருக்கும். அதில் ஏறி எப்படியோ வீட்டுக்குச் சென்றுவிட்டான் கலைவாணன்.

அன்று இந்த சம்பவம் எங்களுக்குள் பரபரப்பாக பேசப்பட்டது. மறுபடியும் எப்படியும் கலைவாணனை அவனது பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள் என்று எங்களுக்கு நன்றாகவேத் தெரியும். பள்ளி முதல்வர் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறாரோ என்று பயந்துக் கொண்டிருந்தோம்.

அப்போது எங்கள் பள்ளியின் முதல்வராக இருந்தவர் இறையருட்கவிமணி என்று போற்றப்படும் பேராசிரியர் கா.அப்துல் கபூர்.

கா..அப்துல் கபூர்

பள்ளி முதல்வர்

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்று கூறுவதைப்போன்று “அழகுத்தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று எங்கள் பள்ளி முதல்வருக்கு புகழ்மாலைச் சூடுவார்கள் தமிழறிந்த சான்றோர்கள்.

எதிர்பார்த்தபடியே கலைவாணனின் குடும்பத்தார் மீண்டும் அவனை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துவிட்டு போனார்கள். “போன மச்சான் திரும்பி வந்தான்” என்று பாட்டுப்பாடி நாங்கள் குதூகலித்தோம்.

கலைவாணனை அழைத்து எங்கள் பள்ளி முதல்வர் அவன் ஓடிப்போனதற்கான காரணத்தை வினவுகிறார்.

“உனக்கு இங்கிருப்பது பிடிக்கவில்லையா?” என்று பரிவோடு விசாரிக்கிறார்.

பள்ளி வளாகத்திலிருந்து சுவரேறிக் குதித்து ஓடிப் போனதற்கு கலைவாணன் சொன்ன காரணத்தைக் கேட்டால் நீங்களே சிரித்து விடுவீர்கள்.

அதற்குமுன் எங்கள் பள்ளி வளாகத்தைப் பற்றிய இச்சிறு குறிப்பை படிப்பது அவசியம்.

வண்டலூரில் எங்கள் பிறைப்பள்ளி (Crescent Residential School) நிறுவப்பட்டது ஒரு மாங்காய் தோப்பினில்தான். கட்டிடங்கள் யாவும் எழும்பிய பின்னரும் வளாகத்தினுள் எங்கு பார்த்தாலும் மாமரங்களில் மாங்காய் காய்த்துத் தொங்கும். வேண்டுமளவு மரத்திலேறி மாங்காய் பறித்துத் தின்பது எங்களது ‘வீரதீர’ பொழுதுபோக்காக இருந்தது.

“இங்கிருப்பது உனக்கு பிடிக்கவில்லையா….? ஏன் இங்கிருந்து சுவரேறிக் குதித்து ஓடினாய்..?” என்ற முதல்வரின் கேள்விக்கு கலைவாணன் சொன்ன பதில் இதுதான்.

“நான் மாந்தோப்பில் மாங்காய் பறித்து தின்பதற்காக சுற்றி வந்தேன். அப்போது ஒரு மாங்காயை பறித்து நான் உண்டேன், அது மிகவும் சுவையாக இருந்தது. அது சாப்பிட்டபின் அப்படியே தூங்கி விட்டேன் அப்புறமா கண்முழிச்சு பாத்தபோது நான் மவுண்ட் ரோடுலே நின்னுக்கிட்டு இருந்தேன். எனக்கு எப்படி ஸ்கூலுக்கு போறதுன்னு வழியே தெரியலே. அப்புறமா அப்படியே நான் வீட்டுக்குப் போயிட்டேன்”

இதை கலைவாணன் சொன்னபோது ஒரு சில ஆசிரியர்களும் கூடவே இருந்தார்கள். முதல்வாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆசிரியர்களாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

கலைவாணனின் ‘சால்ஜாப்பு’ பதிலை பொறுமையாக காதுகொடுத்து கேட் ட எங்கள் பள்ளி முதல்வர் கூறிய பதில் என்ன தெரியுமா?

“அடேங்கப்பா….! கலைவாணா! நீ கதை சொல்வதிலும், கற்பனையிலும் உன் தகப்பனையே மிஞ்சிட்டே,,!” என்றார்.

கலைவாணன் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவன். பிசிறில்லாமல் சீராக பாடக் கூடியவன். கதை, கவிதை எழுதுவதிலும் அவனுக்கு ஆர்வம் அதிகம். ஒரு முறை கண்ணதாசன் எங்கள் பள்ளிக்கு வந்தபோது “அடி என்னடி ராக்கம்மா கண்டாங்கி நெனப்பு” என்ற பாடலை தாளம் பிசகாமல் எங்கள் எல்லோர் முன்னிலையிலும் இனிமையாக பாடிக் காட்டினான் அந்த நினைவலைகள் இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.

நானும், பிரான்சு நாட்டில் இருக்கும் என் பள்ளி நண்பன் காரைக்கால் திப்பு சுல்தானும் சந்தித்து உரையாடும்போதெல்லாம் கலைவாணன் பற்றிய பேச்சு எப்படியாவது வந்துவிடும். பள்ளிப் பருவத்திற்கு மீண்டும் சென்று விடுவோம்.

ஒருநாள் காலை வேளையில் என் நண்பர் அஹ்மது தெளஃபீக்கிடமிருந்து ஓர் அதிர்ச்சியான செய்தி வந்தது.

காக்கா சேதி கேள்விப் பட்டியலா..?

என்ன செய்தி தெளஃபீக்..?

நம்ம கலைவாணன் இறந்து போயிட்டான் காக்கா.  இப்பத்தான் நான் கேள்விப்பட்டேன்

என் தலையில் பேரிடி விழுந்தது போலிருந்தது. எந்த கலைவாணன் என்றெல்லாம் நான் கேட்கவில்லை. காரணம் எங்களுக்குத் தெரிந்த ஒரே கலைவாணன் அவன்தான். துடிதுடித்துப் போனேன். என் உதிரம் சற்று நேரம் உறைந்து போனதுபோலிருந்தது

“அழியாத கோலங்கள்” படத்தில் அந்த குண்டு பையன் இறந்தபோது அவ்ற்ட்டவனது நண்பர்களுக்கு ஏற்பட்ட  அதே மனபாதிப்பு எங்களுக்கும் கலைவாணனின் திடீர் மறைவு அதிர்ச்சிக்குள்ளாகியது.

கலைவாணர் என்.எஸ்.கே.யின் நினைவாகவே கண்ணதாசன் தன் மகனுக்கு கலைவாணன் என்ற பெயரைச் சூட்டினார் . தனக்கு பிடித்தமானவர்களின் பெயர்களை தன் பிள்ளைகளுக்குச் சூட்டி அழகு பார்ப்பதில் கவியரசருக்கு அலாதிப் பிரியம்.

அறிஞர் அண்ணாவின் நினைவாக அண்ணாத்துரை; பாரதிதாசனின் நினைவாக கண்மணி சுப்பு (சுப்பு ரத்தின தாசன்).

தங்குவதற்கு இடமின்றி. தனது 14-வது வயதில் பிழைப்புத் தேடி சென்னையில் சுற்றித் திரிந்த கண்ணதாசனுக்கு எந்த மெரினாவிலுள்ள காந்தி சிலை வழியே திக்குத் தெரியாமல் சுற்றித் திரிந்தாரோ; அவருக்கு பிடித்த அதே காந்தி மகானின் நினைவாக இன்னொரு மகனுக்கு காந்தி என்ற பெயர்.

கலைவாணனுக்கு தன் தந்தையைப் போலவே குழந்தை மனசு. கண்ணதாசனுக்கும் அவன்மேல் அலாதிப் பிரியம். கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் பாலு மகேந்திராவின் “மூன்றாம் பிறை”  படத்தில்  இடம்பெற்ற    “கண்ணே கலைமானே” என்ற பாடல். (அவர் கடைசியாக எழுதிய பாடல் இடம் பெற்ற படம் “உன்னை நான் சந்தித்தேன் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு)

“கண்ணே கலைமானே!” என்ற பாடல் தன் தந்தை தன்னை நினைவில் வைத்துதான் எழுதினார் என்று கலைவாணன் பிற்காலத்தில் அவனுக்கு நெருங்கியவர்களிடம் பலமுறை கூறி மகிழ்ந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

தன் சகோதரன் கலைவாணனின் நினைவுகளை கண்ணதாசனின் இன்னொரு தாரத்தின் (புலவர் வள்ளியம்மை) செல்வப் புதல்வியான விசாலி கண்ணதாசன் கூறுவதைக் கேளுங்கள்:

“அவன் சாகக்கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒன்னும் போச்சு. கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்”

தன்மீது அளவில்லாத அன்பைப் பொழிந்த அன்புச் சகோதரனை இழந்தபோது இந்தச் சகோதரியின் மனம் எந்தளவுக்கு பாடுபட்டிருக்கும் என்பதை நம்மால் உணர முடிகின்றது.

தகப்பனின் அன்பை முழுமையாக அனுபவிக்க கொடுத்து வைக்காதவர் விசாலி என்றுதான் சொல்ல வேண்டும்.. கவிஞர் மரணிக்கையில் விசாலிக்கு கருத்து தெரியாத பருவம்.  அப்போது அவருக்கு வெறும் நான்கு வயதுதான்.

‘’அப்பாவோட மற்ற பதினான்கு பிள்ளைகளில் கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என்கூட ஒட்டல” என்கிறார் விசாலி கண்ணதாசன்.

“கண்ணே கலை மானே”  பாட்டில் “கலை” என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்று கலைவாணன் ஒருமுறை  தன் சகோதரிகளிடம் வாதம் புரிய, அவர்கள் அதை “இல்லை” என்று மறுக்க அதை உறுதிப்படுத்த நேராகவே சென்று தன் தந்தையிடம் சந்தேகம் கேட்டிருக்கிறான்.

இன்னொருமுறை கலைவாணன் தன் தந்தையிடம் ஓடிச்சென்று அவரைக்  கட்டிப்பிடித்து

“அப்பா.. நீங்க எல்லாரைப் பத்தியும் பாட்டு எழுதுறீங்க. என்னைப் பத்தியும் பாட்டு எழுதுங்கப்பா”

என்று செல்லமாக கேட்டிருக்கிறான். கவியரசரின் நகைச்சுவை உணர்வுக்கும், சமயோசித புத்திக்கும் அளவே  கிடையாது.  உடனே குறும்புத்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

“உன்னைப் பத்தி ஏற்கனவே எழுத்திட்டேனடா…” என்று கவிஞர் சொல்ல கலைவாணனுக்கு ஒரே ஆச்சரியம். “சொல்லுங்கப்பா..” என்று மீண்டும் அவர் தோளைப் பிடித்து உலுக்க

“ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ?  பாட்டை உனக்காகத்தானே எழுதினேன்” என்றாராம் அந்த கவிராஜன் சிரித்துக் கொண்டே..

இந்த பதிலைக்கேட்ட மற்ற குழந்தைகளும் முண்டியடித்து அவர் மடிமேல் தவழ்ந்து

“அப்ப எங்களைப் பத்தியெல்லாம் ஒண்ணும் எழுதலையா..?” என்று சிணுங்கி இருக்கிறார்கள்.

கவிச்சக்கரவர்த்திக்கு  பேச  சொல்லியா கொடுக்க வேண்டும்?

“அதுவும் எழுதி விட்டேனே..…!” என்றாராம். “அது என்ன பாட்டு?” என்று பிள்ளைகள் ஆர்வத்துடன் வினவ..

ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு
ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றால்
ஒன்பது பிள்ளை அந்த
ஒன்பதிலே ஒன்றுகூட
உருப்படியில்லை..
உருப்படியில்லை “

என்று பாடி முடித்துவிட்டு, “இதையெல்லாம் உங்களை மனசுலே வச்சுத்தான் எழுதினேன்” என்று பிள்ளைகளை கலாய்த்தாராம்.

பாவம் பிள்ளைகள். இந்த பதிலை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. மறுபடியும் செல்லமாக சிணுங்கிக் கொண்டு ஓடி விட்டன. .

கண்ணதாசனுக்குள்ளே கவிஞர்களுக்கே உரித்தான குசும்பு சற்று அதிகமாகவே குடிகொண்டிருந்தது

எங்க ஊரில் ஒரு பழமொழி வட்டார வழக்கில் கூறுவார்கள். “இருந்தா நவாப்சா, இல்லேன்னா பக்கீர்சா”. கண்ணதாசனைப் போல் லட்சக்கணக்கில் சம்பாதித்தவரும் இல்லை. அதுபோல   செலவழித்தவர்களும் இல்லை.  அப்போது லட்சங்கள் கோடிகளுக்குச் சமம்.

பெருமளவு சம்பாதித்துக் கொண்டிருந்த வேலையிலும் கடனில் மூழ்கி கண்ணதாசன் தன் குழந்தைகளுக்கு தீபாவளியன்று புதுத்துணிமணி, பாட்டாசுகள் வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் கண்ணீர்கூட வடித்திருக்கிறாராம்.

கண்ணதாசன் சில சமயம் இரவில் தாமதமாக வீடு திரும்புவார். சில பிள்ளைகள் முழித்துக்கொண்டு அவருக்காக காத்திருப்பார்கள். ஜாலியான மூடு வந்துவிட்டால் தனது அம்பாஸிடர் காரை எடுத்துக் கொண்டு மவுண்ட்ரோடிலுள்ள புகாரி அல்லது பிலால் ஓட்டலிலிருந்து வகைவகையான அசைவ உணவு பார்சல் கொண்டுவந்து வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.

கண்ணதாசனுக்கு செட்டி நாடு சமையலில் காரமாக சமைக்கப்பட்ட நாட்டுக்கோழி வறுவல், நண்டு, முயல்கறி, மான்கறி எல்லாமே விரும்பிச் சாப்பிடுவார்.

“பறப்பதில் ஏரோப்பிளேனும், ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று நகைச்சுவையாகச் சொன்னதை ஒரு பத்திரிக்கை பேட்டியின்போது காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

“குழந்தைகளுக்கு இடையே வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்” என்று தன் தந்தை பற்றிய சுவையான நினைவுகளைப் பகிர்கிறார் காந்தி கண்ணதாசன்.

—-அப்துல் கையூம்

– —- இன்னும் தொடரும்

கண்ணதாசன் நினைவுகள் – பாகம் 1

கண்ணதாசன் நினைவுகள் – பாகம் 1

கலைவாணன்

“அன்புள்ள அத்தான்:” படத்தில் ஷோபாவுடன் கலைவாணன்

கலைவாணன்

என் இளமைக் காலத்தில் கண்ணதாசன் என்ற மாபெரும் ஆளுமை பொருந்திய மனிதனோடு ஓரிரண்டு முறை பேசிப் பழக வாய்ப்பு கிட்டியதையும், அவரது தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பங்குகொண்டு நான் கவிதை வாசித்ததையும், அவரிடம் “சபாஷ்” வாங்கியதையும் இன்றளவும் பெருமையோடு எண்ணிப் பார்க்கிறேன்.

“வசிட்டர் வாயால் பிரம்மரிஷி” பட்டம் பெற்றதைப் போல் என்று முதுமொழி  சொல்வார்களே அதை அன்று நான் முழுவதுமாக உணர்ந்தேன்.

எனது பள்ளிப் பருவத்தின்போது, வண்டலூர் பிறைப்பள்ளியில் (Crescent Residential School) என்னோடு படித்த சகமாணவர்களுக்கும் அவரைச் சந்தித்து உரையாடுகின்ற அரிய வாய்ப்பு கிடைத்தது, அப்படிப்பட்ட ஓர் அதிர்ஷ்டம் எங்களுக்கு வாய்த்தமைக்கு வலுவான காரணம் ஒன்று உண்டு.

அதற்கான காரணம் என் நண்பன் கலைவாணன் கண்ணதாசன்.

கலைவாணன் என்னைவிட வயதிலும் வகுப்பிலும் ‘ஜூனியர்’. அவன் தந்தையின் தமிழாற்றலுக்கு மனதைப் பறிகொடுத்த நான், கலைவாணனுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தேன். அவனுக்குள்ளும் தன் தந்தைபோலவே கதை, கட்டுரை, கவிதை, நடிப்பு என அனைத்துக் கலைகளிலும் ஆர்வம் குடிகொண்டிருந்தது

எங்களோடு ஹாஸ்டலில் தங்கி ஒன்றாக பழகிய சகமாணவன் அவன். சென்னை மாநகரத்திலேயேதான் கண்ணதாசன் வீடும் இருந்தது. இருந்தபோதிலும் ஹாஸ்டலில் பிறமாணவர்களுடன் தங்கியிருக்கும்போது, அவனது வாழ்க்கையில் உலக அனுபவங்கள் இன்னும் கூடுதலாக கிடைக்கும், எல்லோருடனும் சேர்ந்து பழகும் சந்தர்ப்பம் உண்டாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் அவனை வண்டலூர் கிரெசெண்ட் பள்ளியில் கவியரசர் சேர்த்திருந்தார்.

தன் மகனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைக்கும்  எல்லா தகப்பன்மார்களைப் போலவே கண்ணதாசனும் ஆசைப்பட்டார். என்னைப் பொறுத்தவரை கண்ணதாசன் ஒரு சிறந்த கவிஞனாக மட்டுமல்ல. சிறந்த தகப்பனாகவும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.

மூன்று பெண்மணிகளை அவர் மணம் முடித்தார், அவருக்கு 14 குழந்தைகள் இருந்தன என்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி சிலர், அவர் சிறந்த குடும்பத் தலைவானாக இருக்கவில்லை என்று குறை கூறுவதை ஒருநாளும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

கண்ணதாசனின் முதல் மனைவி பொன்னழகி என்ற பொன்னம்மா வயிற்றில் உதித்தவன் என் நண்பன் கலைவாணன். அம்மையாருக்கு நான்கு மகன்கள்: கண்மணி சுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம். மூன்று மகள்கள்; அலமேலு, தேனம்மை, விசாலாட்சி.

கண்ணதாசன் அமெரிக்காவிலுள்ள தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளச் சென்று அவருக்கு அங்கு  மாரடைப்பு  ஏற்பட்டு சிக்காகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.  அப்போது அவரோடு உடனிருந்து கவனித்துக்கொள்ள  இங்கிருந்துச் சென்ற அவரது குடும்பத்தினர் மூன்று பேர்கள்.

அவருடைய மனைவிகள் பார்வதி, வள்ளியம்மை, மற்றும் அவருடைய அன்புக்கு பாத்திரமான செல்ல மகன் கலைவாணன். கவிஞரின் உயிர் பிரிந்து அங்கிருந்து  அவருடைய பூதவுடல் விமானத்தில் தாயகம்  வந்தபோது இவர்களும் விமானத்தில் கூடவே வந்தார்கள்.

கலைவாணன் மீது மற்ற குழந்தைகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகவே பற்றும் பாசமும் கவிஞர் வைத்திருந்தார் என்பது என் எண்ணம். எனது இந்தக் கருத்தில் அவரது மற்ற குழந்தைகளுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதனால்தான் இது எனது சொந்தக் கணிப்பு என்பதை இங்கே கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

யாசீன் காக்காவும் கண்ணதாசனும்

yaseen-kaka

கீழக்கரை ஆ,மு.அஹ்மது யாசீன்

கலைவாணன் கண்ணதாசனை எங்கள் பள்ளியில் சேர்க்க கவிஞர் பெருமகனாருக்கு ஆலோசனை வழங்கியது கீழக்கரையைச் சேர்ந்த யாசீன் காக்கா அவர்கள்தான். வளநாடு சினி ரிலீஸ், கிரஸெண்ட் மூவீஸ், வச்சிர நாடு பிலிம்ஸ் , செம்பி பிலிம்ஸ், சேது பிலிம்ஸ் போன்ற சினிமா சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தவர் அந்த பிரபலம்.  நடிகர் பாலாஜி போன்ற படத்தயாரிப்பாளர்கள் யாசீன் காக்காவுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள். நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப்போல 1970 – 1980 கால கட்டங்களில் தமிழகத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் இவர்களின் தொடர்பு இல்லாமல் வெளிவந்ததில்லை.

%e0%ae%af%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be

பாலாஜி, ரஜினிகாந்துடன் யாசீன் காக்கா புகைப்பட உதவி:சோனகன் மஹ்மூது

திரைப்படத்துறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் கவியரசர் கண்ணதாசனுக்கு யாசீன் காக்கா மிகவும் வேண்டப்பட்ட நபராக இருந்தார். கவிஞர், உயிருக்கு உயிராக நேசித்த நண்பர்களின் பட்டியலில் யாசீன் காக்காவுக்கும் இன்றிமையாத ஓர்    ஒரு இடமுண்டு. கண்ணதாசனுக்கு சினிமாத் துறையில்  பொருளாதார ரீதியாக  நிறைய உதவிகள் அவர் புரிந்திருக்கிறார்.

அக்கால கட்டத்தில் ‘குமுதம்’ இதழில் “என் எனிய நண்பர்கள்” என்ற தலைப்பில் தன் நெஞ்சில் நீங்காது இடம்பெற்றிருந்த நண்பர்களைப் பற்றி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கண்ணதாசன் கவிதை எழுதிவந்தார்.

வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் மாதவன், யாசீன் காக்கா போன்றோர் கண்ணதாசனின் இதயத்தில் தனியொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள். மற்றவர்களின் பெயர்கள் எனக்கு நினைவுக்கு வரவில்லை.

அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அழகுற தமிழில் அட்டகாசமாக கவிதைகள் வடித்தார். ஒவ்வொரு வாரமும் அடுத்ததாக யாரைப் பற்றி எழுதப் போகிறார் என்ற ஆர்வத்தில் குமுதம் இதழுக்காக நான் காத்திருப்பேன்.

[யாசீன் காக்காவுக்கும் முன்னாள் திமுக அமைச்சர் மாதவனுக்குமிடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வந்தது. அது ஒரு தனி ட்ராக். மாதவனை ஒருமையில் “அவன்”, “இவன்” என்று அழைக்குமளவுக்கு இருவருக்குமிடையே நெருக்கம் நிலவி வந்தது]

தனது நண்பர் யாசீன் காக்கா அவர்களைப்பற்றி கண்ணதாசன் “குமுதம்” இதழில் எழுதியிருந்த  ஒரு சில வரிகள் பசுமரத்தாணியாய் என் மனதில் இன்னும்  பதிந்துள்ளது; ஆழமாய் பொதிந்துள்ளது.

yasin

கண்ணதாசனுடன் யாசீன் காக்கா – புகைப்பட உதவி: சோனகன் மஹ்மூது

எப்போதும் புன்சிரிப்பு
எவரிடத்தும் பேசும்போதும்
தப்பாக ஒருவார்த்தை
தவறியேனும் சொல்வதில்லை
தழுவவரும் நண்பருக்கு
தங்கக்கட்டி
முப்பாலில் வள்ளுவனார்
வாழ்க்கை எல்லாம்
முன்பாக காணவரும்
எளிய வாழ்க்கை
அப்பழுக்கில்லா(த) எங்கள் சேதுநாட்டு
யாசீன்பாய் எனதுஇனிய நண்பராவார்

[மேற்கண்ட கவிதையில் ஒன்றிரண்டு சொற்கள் விடுபட்டிக்கலாம், காரணம் இது முறையான மரபுக்கவிதை வடிவில் இருந்தது. நினைவில் இருந்ததை மட்டும் இங்கே வடித்திருக்கிறேன்.]

தன் மனதுக்கு உகந்த நண்பருக்கு இதைவிட ஒரு சிறந்த சன்மானம் என்ன கொடுக்க முடியும்? அதுதான் கண்ணதாசன்.

கண்ணதாசனைக் காணச் சென்ற நான்

ஒருமுறை கண்ணதாசனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு கலைவாணனுடன் காணச் சென்ற அந்த நிகழ்வு மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. அதை நினைத்தாலே இனிக்கும்.

சென்னை தியாகராய நகரில், நடேசன் பூங்காவுக்கு பின்புறம் இருந்தது அவர் வீடு. எழுதுவதற்கு பெரும்பாலும் தனிமையை விரும்பி கவிதா ஓட்டலில் தங்கியிருப்பது கவிஞரின்   வழக்கம். அன்று அவர் தி.நகர் வெங்கட நாராயணா சாலையிலுள்ள வீட்டில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அங்குச் சென்றோம். அம்பாஸிடர் கார் ஒன்று வெளியில் நின்றிருந்தது. வயிற்றுக்கு மேலே உயர்த்திக் கட்டிய வேட்டியோடு வீட்டின் வெளியே அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தார் அந்த கவிப்பேரரசர்.

அருகில் சென்று அவரைப் பார்த்த நான், என்னை நானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்; நான் காண்பது கனவா அல்லது நனவா என்று புரியாமல் திகைத்தேன்.

ஆஜானுபாகுவான உடல்வாகு. கம்பீரமானத் தோற்றம். உருண்டையான முகம். கள்ளம் கபடமற்ற வெளிப்படையான பேச்சு.

கலைவாணனுக்கும் கண்ணதாசனுக்கும் தோற்றத்தில் நிறைய ஒற்றுமை இருந்தது. ‘ஜெராக்ஸ்’ காப்பி எனலாம்.

“ரத்தத் திலகம்”  படத்தில் கோட்டு சூட்டு அணிந்துக்கொண்டு “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்று பாடி நடித்த கலைஞனா அவன் என்ற பிரமிப்பு என்னை ஆட்கொண்டு என்னை ‘மெளனி’யாக்கியது.

நாடோறும் சிலோன் வானொலியில் கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது போன்றோர் அனுதினமும் சுவைத்து பாராட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரன் முன் நான் நிற்கின்றேன் என்ற உணர்வு ‘ஹை-ஹீல்ஸ்’ அணியாமலேயே என்னை உயர்த்திக் காண்பித்தது.

அவரது தீவிர ரசிகன் என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். எத்தனையோ கேள்விகள் அவரிடம் கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டுச்  சென்றேன்.   ஊஹீம்….    எதுவுமே கேட்கத் தோன்றவில்லை.  எனக்கு பேச்சே எழவில்லை.  “பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல” அவரையே பார்த்துக்கொண்டு பிரமித்துப் போய் நின்றேன். அப்பொழுது ஒன்பது அல்லது பத்தாவது வகுப்பு  நான்  படித்துக் கொண்டிருந்தேன்.

சிறுகூடல்பட்டி சிந்தனைவாதி பேசப்பேச நான் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பாசமலர் படத்தில் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”  என்ற அவரது   பாடலுக்கு சிவாஜி கணேசன்    ” உம்…உம்.. உம்..உம்,”  , என்று ‘உம்’ கொட்டிக்கொண்டிருப்பார்.  அதுபோல நான் ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தேன்.

எங்கள் பள்ளிக்கூட வாழ்க்கைப் பற்றி விசாரித்துவிட்டு, அவரது அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்தார். எங்களுக்கு புத்திமதியும் கூறினார்.

அவரை சந்தித்துவிட்டு திரும்பி வருகையில் என்னாலேயே நம்ப முடியவில்லை; நான் பார்த்து பேசிவிட்டு வந்தது தமிழகத்தையே தன் எளிமையான சொற்களால் கட்டுண்டு அடிமைப்படுத்திய அந்த கவிராஜனைத்தானா என்று……

—அப்துல் கையூம்

(நினைவுகள் இன்னும் பல பாகங்களாகத் தொடரும் (இன்ஷா அல்லாஹ்)

என் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய நிகழ்வு

Crescent School

Crescent School – First Batch (கடைசி வரிசையில் வலதுபுற ஓரத்தில் நான்)

1967-ஆம் வருடம் ஜூலை மாதம் 30-ஆம் தேதி சென்னை இம்பீரியல் ஹோட்டலில் சென்னை நகர முஸ்லீம் பிரமுகர்களையும், கீழக்கரை வர்த்தக செல்வந்தர்களையும் அழைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கிறார் ஜனாப் பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்கள்.

பல்வேறு நாடுகளை சுற்றி வந்த அவருக்கு, அங்குள்ள கல்வி நிலையங்களைப் போன்று உயர்தர ஆங்கில மொழி பாடக் கல்வியுடன் விளையாட்டு மற்றும் பல்வேறு திறமைகளையும் மாணவர்களுக்கு வளர்க்கும் வண்ணம்; மாதிரி பள்ளிக்கூடத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்ற அவரது நெடுநாள் ஆசைக்கு அடித்தளம் இட்ட நாள் அது.

பரவலான விழுதுகளுடன் ஓங்கி வளரவிருக்கும் ஒரு ஆலமர விருட்சத்திற்கு அன்று தான் விதையூன்றப்படுகிறது.

“Big things often have small beginnings” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இம்பீரியல் ஹோட்டலில் கூடிய இந்த கூட்டத்தில்தான் “சீதக்காதி டிரஸ்ட்” என்னும் பெயரில் ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டு, அதற்கான முறைப்படி பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்தேறின.

சென்னை மையப்பகுதியிலிருந்து 25 கற்களுக்குள்ளாக இயற்கை சூழ்நிலையில் இக்கல்வி நிலையம் அமைப்பதற்கும், அதுவரையில் தற்காலிகமாக சேத்துப்பட்டில் ஹாரிங்டன் சாலையிலுள்ள “நமாஸி வில்லா” என்ற கட்டடத்தில் இயங்குவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டன,  தொடர்ந்து வரும் கல்வியாண்டில் அதாவது 1968 ஜூலை மாதத்தில் பிரிப்பரேட்டரி வகுப்பும், இரு ஆறாவது வகுப்புகளும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆங்கிலத்தை பாடமொழியாகக் கொண்டு சென்னை பல்கலைக் கழக மெட்ரிகுலேஷன் தேர்வுகளுக்கு ஆயத்தம் செய்யவும், தமிழறிவு, மார்க்கக் கல்வி, அரபு மொழிப் பயிற்சி, தொழிற்பயிற்சி, பொழுதுபோக்கு அம்சம், உடற்பயிற்சி, விளையாட்டு என சகல கலைகளிலும் தேர்ச்சி பெறவைக்கும் விதத்தில் தலைசிறந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த முடிவாகியது. தமிழறிஞர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் அவர்களை முதல்வராக நியமிக்க முடிவாகியது.

இஸ்லாமிய சமுதாயத்திற்கு பயன்படும் விதத்தில் இதுபோன்ற கல்வி நிலையம் இன்றிமையாத ஒன்று என இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட அத்தனை பேர்களும் பாராட்டிப் பேசினார்கள். இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் என்று உறுதி பூண்டனர்.

இந்த நிகழ்வு இப்படியே இருக்கட்டும்; என் சொந்தக் கதைக்கு இப்போது வருகிறேன்.

எனது தந்தைக்கு என்னை ஆங்கில வழிக் கல்வி கற்பித்து என்னை பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்ற கனவு. எல்லா தந்தைமார்களுக்கும் ஏற்படும் இயற்கையான உணர்வுதான் இது. அப்போது மிகச்சிறந்த கான்வென்ட் ஆக திகழ்ந்தது ஊட்டியில் லவ்டேல் பகுதியில் இருக்கும் “தி லாரன்ஸ் பள்ளிக்கூடம்” மட்டும்தான்.  என் தந்தைக்கு அவ்வளவு தூரம் என்னை அனுப்பி வைக்க மனம் வரவில்லை. எங்களூர் நாகூர் அருகிலுள்ள தஞ்சாவூரில் இருக்கும் The Sacred Heart convent என்ற ஆரம்பப் பாடசாலையில் நிறுவனத்தில் என்னை சேர்த்து விட்டார்கள். அப்பள்ளியின் முதல்வர் வெள்ளைக்கார கன்னியாஸ்திரி.

ஆங்கில வழிக் கல்வியுடன் கிறித்துவ மத கோட்பாடுகளையும் எங்கள் பிஞ்சு மனதில் பதிய வைத்தார்கள். மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். படுக்கை விட்டு எழும்போதும், சாப்பிடுவதற்கு முன்பும், உறங்குவதற்கு முன்பும் ஜெபம் சொல்ல வேண்டும்.  பரிட்சை எழுதும் நாட்களில் மாதக்கோவிலுக்குச் சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்யாமல் போனால் நான் பரிட்சையில் பாஸாகவே முடியாது என்ற நம்பிக்கை எனக்குள் பதிந்துப் போயிருந்தது. ஒருமுறை என் நாக்கில் அப்பத்தை வைத்து ஞானஸ்நானம் கூட செய்து வைத்தார்கள்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பள்ளியிலிருந்து வேளாங்கண்ணிக்கு  எங்களை சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். மாதாக்கோயில் தரிசனம் முடிந்தபிறகு நாகூருக்கும் சென்றோம். அப்போது என் வீட்டிற்கு சிறிது நேரம் சென்றுவர அவகாசம் கிடைத்தது.

என் வீட்டில் உள்ளவர்களுக்கு என்னைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி. அதோடு அவர்களுக்கு வேறொரு உண்மையான அதிர்ச்சியும் காத்திருந்தது. செலவுக்காக பணம் என் பெற்றோரிடமிருந்து வாங்கி பர்ஸில் வைக்கும் போது அதிலிருந்து ஜபமாலை கீழே விழுந்ததை என் பாட்டி ஜுலைகா பீவி கவனித்து விட்டார். வலுக்கட்டாயமாக என் பர்ஸை பிடுங்கி சோதித்துப் பார்த்ததில் அதில் ஒரு மேரி மாதா படமும் இருந்தது. என் கண் முன்னே அப்போது ஒரு பிரளயமே நடந்து முடிந்தது.

“ஆங்கில வழிக் கல்வி வேண்டுமென்று கான்வெட்டுக்கு அனுப்பி அவனை இப்படி மதமாற்றம் செய்துவிட்டாயே?” என்று என் தந்தையை சரமாரியாகத் திட்டித் தீர்த்துவிட்டார். தன் தவற்றை உணர்ந்த என் தந்தை தலையை தொங்கப்போட்டு நிற்பதைத்தவிர அவருக்கு வேறுவழி தெரியவில்லை. பெரும் எதிர்பார்ப்புடன் வளர்த்த தன் மகனின் நிலைமை இப்படி தடம்புரளும் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.

நானும் அங்கிருந்து கிளம்பி மீண்டும் தஞ்சாவூருக்கு வந்துவிட்டேன். அந்த பள்ளியில் ஆண்களுக்கு ஐந்தாம் வகுப்புவரைதான். அடுத்த வருடம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர வேண்டும்.

நடந்த விஷயங்களை மனக்குமுறலுடன் என் தந்தை தனது நெருங்கிய நண்பர் இசைமுரசு நாகூர் E.M.ஹனிபாவிடம் சொல்லிக்காட்ட “கவலையை விடுங்கள் அதற்கு வழி இருக்கிறது” என்று கூறி தன் நண்பர் பி.எஸ்.ஏ.அப்துல் ரஹ்மான் சென்னையில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கவிருப்பதாகவும் அதில் ஆங்கில வழிக் கல்வியுடன் இஸ்லாமிய மார்க்க கல்விக்கான வசதிகள் உண்டு என்ற நற்செய்தியை கூறி இருக்கிறார். அச்செய்தி என் தந்தையின் வயிற்றில் பாலை வார்த்தது.

நாகூர் ஹனிபாவின் மூத்த மகன் E.M.நெளஷாத்துடன் என்னையும் அவரே “கிரசென்ட் ரெசிடென்ஷியல் ஸ்கூல்” என்ற பெயர் கொண்ட பிறைப்பள்ளியில் அழைத்துச் சென்று சேர்த்தும் விட்டு விட்டார்.

மார்க்கக் கல்வியினை கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குளச்சல் அஹ்மது பாகவி அவர்களிடமிருந்து மாணவர்களாகிய நாங்கள் வாங்கிய பிரம்படி கொஞ்சநஞ்சமல்ல. வாங்கிய ஒவ்வொரு அடியும் எங்களின் சீரிய வாழ்வுக்கு அடித்தளமிட்டது.

இமாம் கஸ்ஸாலி அவர்களின் அரபி பாடல்களும், இமாம் பூஸ்ரி இமாம் அவர்களின் பாடல் வரிகளும் மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும், அப்படித் தவறினால் எங்கள் பாகவி ஹஸ்ரத் பிரம்பினை முதலில் தலைக்கு மேல் சுழன்றுக் கொண்டிருக்கும் மின்விசிறியில் காட்டுவார். “தடக் தடக்கென” சப்தம் வரும். அதே வேகத்தில் எங்களின் இதயங்களும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து விடும். பாடல் வரிகளை தப்பாக பாடினால் மனுஷன் பின்னி எடுத்து விடுவார்.

விடியற்காலை எழுந்து “சுபுஹு” தொழுகைக்கு ஜமாத்தில் கலந்து கொள்ளவில்லை எனில் அதிகாலை சிற்றுண்டி அவித்த முட்டை கிடைக்காமல் போய்விடும். மார்க்கப்பற்று நாளடைவில் தானாகவே ஒவ்வொரு மாணவர்கள் மனதிலும் வேரூன்றியது. அறியாத வயதில் வழிமாறிப் போனதை எண்ணி எத்தனையோ முறை நான் கண்ணீர் வடித்திருக்கிறேன்.

தஞ்சை கான்வெண்டில் என்னுடன் படித்த பழநி என்ற வகுப்புத்தோழன் பாதிரியார் ஆகிவிட்டதாக பின்னர் கேள்வியுற்றேன். கல்வித் தந்தை பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்களின் முயற்சியால் இப்படியொரு கல்வி நிலையம் தொடங்காமல் போயிருந்தால் இந்நேரம் நானும் ஒரு Rev.ஞானத்தந்தை பாதிரியாராக வெள்ளை அங்கியுடன் பாவமன்னிப்பு வழங்கிக் கொண்டிருப்பேனோ என்ற நினைப்பு என் மனதில் பயத்தை உண்டு பண்ணுகிறது.

  • அப்துல் கையூம், பஹ்ரைன்