எண்ணச் சிதறல்கள்

கலைஞர் மு. கருணாநிதியும் கருணை ஜமாலும்

இன்று ஆகஸ்ட் 10. கலைஞரின் “முரசொலி” பத்திரிக்கை தொடங்கப்பட்ட நாள். இந்நாளில் கலைஞருக்கும் கருணை ஜமாலுக்கு இடையே இருந்த சரித்திரப்புகழ் கூறும் நட்பினை இங்கே பதிவு செய்வது என் கடமை.

நடிகர் விஜயகாந்த் வாழ்க்கையில் எப்படி இப்ராஹிம் ராவுத்தர் என்ற கேரக்டர் முக்கியமோ, டி.ஆர்.ராஜேந்தர் வாழ்க்கையில் எப்படி ஈ.எம்.இப்ராஹிம் என்ற கேரக்டர் முக்கியமோ அதுபோன்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் வாழ்வில் திருவாரூர் கருணை எம்.ஜமால் என்ற கேரக்டர் மிக மிக முக்கியமானது.

கருணை & கருணா.. ஆஹா.. என்ன ஒரு பெயர் காம்பினேஷன். நட்பின் இலக்கணத்திற்கு கபிலர் & பிசிராந்தையாரை உதாரணம் காட்டுபவர்கள் இவர்களை ஏன் எடுத்துக்காட்டாகச் சொல்வதில்லை?

பிற்காலத்தில் தனக்குச் சொந்தமான அச்சகத்தை தன் ஆத்ம நண்பனின் நினைவாக திருவாரூரில் “கருணாநிதி அச்சகம்” என்ற பெயரில் நடத்தி வந்தது நட்பின் இலக்கணமன்றி வேறு என்னவாம்?

அப்போது கலைஞருக்கு வெறும் 18 வயது. அரும்பு மீசைக்காரர். எழுத்துப் பித்தரான கலைஞர் ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையை ஏந்தியும், “குடியரசு” பத்திரிக்கையை கக்கத்தில் வைத்துக்கொண்டும், கருணை ஜமாலை பக்கத்தில் வைத்துக் கொண்டும் இலக்கிய வேட்கையில் அலைந்து திரிந்த நிலாக்காலம் அது.

திராவிட இயக்கத்தின் சார்பாக “குடி அரசு”, “விடுதலை”, “திராவிட நாடு” போன்ற ஏடுகள் அப்போது மக்களிடையே பிரபலமாக வலம் வந்தன. கலைஞருக்கு எப்படியாவது பத்திரிக்கைத் துறையில் சாதனைகள் புரியவேண்டும் என்ற ஓர் ஆர்வம் ஒரு வெறியாகவே மாறி இருந்தது.

கலைஞருக்கும் கருணை ஜமாலுக்கும் இடையேயான நட்புறவு வாலிப வயதில் ஏற்பட்டதல்ல. பால்ய வயது தொட்டே அவர்களுக்குள் தொடர்ந்து வந்த இறுக்கமான உறவு, நெருக்கமான உறவு.

கலைஞருக்கு பத்திரிக்கைத் துறையில் ஈர்ப்பும் ஈடுபாடும் கூடுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் “தாருல் இஸ்லாம்” இதழாசிரியர் பா.தாவுத்ஷா என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். “பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டுபிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு” என்ற அறிவிப்பை தன் இதழில் சவாலாக வெளியிட்டவர். எந்த அளவுக்கு தமிழில் புலமையும், தன் எழுத்தின் மீது அபார நம்பிக்கையும் கொண்டிருந்தால் இதுபோன்ற ஒரு அறிவிப்பை இந்த மனிதர் இவ்வளவு பகிரங்கமாக வெளியிட்டிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்பொழுது வெளிவரும் பத்திரிக்கைகளின் எழுத்துப்பிழைகளை காண்பதற்கு சீத்தலை சாத்தனார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தலை முழுதும் ரத்தக்களறியாகி அப்போலோ மருத்துவமனையில் எமர்ஜென்சியில் அட்மிட் ஆகியிருப்பார்.

ஈரோட்டில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்த “குடியரசு” வார இதழில் கலைஞர் தொடர்ச்சியாக எழுதி வந்தார். அவரது அபார எழுத்தாற்றலால் பின்னர் துணை ஆசிரியாராகவும் பணியில் அமர்ந்தார். தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில் திராவிட எழுச்சிக் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய பத்திரிக்கை ஒன்றே பிரதான கருவியாகவும், கிரியாவூக்கியாகவும் விளங்கியது.
.
பத்திரிக்கைத் தொழில் நடத்துவதென்பது அப்போது சாதாரண காரியமல்ல. காகிதம் கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. சொந்தமாக அச்சகம் இருக்க வேண்டும். நிறைய பணமுதலீடு செய்ய வேண்டும். விநியோகம் செய்வது சிரமமான காரியமாக இருந்தது. பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் யாரும் கலைஞருக்கு உதவ முன்வராத காலத்தில் கைகொடுத்து உதவியது கருணை ஜமால்தான்.

திறமையும் எழுத்தாற்றலும் வாய்ந்த தன் பால்ய நண்பனுக்காக கருணை ஜமால் செய்த உதவி கலைஞரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட முரசொலி, தொடக்கத்தில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. “மாணவநேசன்” என்ற பெயரில் வெளிவந்த இந்த பத்திரிக்கைதான் பின்னர் முரசொலியாக பரிணாமம் அடைந்தது.

இந்த இதழ் பின்னர் பண நெருக்கடியால் நிறுத்தப்பட்டபோது மனமுடைந்துப் போன கலைஞர் பெருத்த சோகத்திற்கு உள்ளானார். நின்று போயிருந்த முரசொலி பத்திரிக்கையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் திருவாரூரில் கலைஞர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதன் பின்னர் கலைஞர் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதப் போய் விட்டார். அவர் வசனம் எழுதிய முதற்படமொன்று வெளியானது. ஆனால் படத்தின் ‘டைட்டிலில்’ அவருடைய பெயர் காட்டப்படவில்லை. காரணம் அப்போது அவர் பிரபல வசனகர்த்தாவாக அறியப்படவில்லை. பிறகு கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” (1947) படத்திற்கு வசனம் எழுதியபோதும் இதே நிலைமைதான். அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்து ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயரை வெளியிட்டார்கள். அபிமன்யு (1948) படம் வெளிவந்தபோதும் இதே நிலைமைதான் தொடர்ந்தது. ஜூபிடர் பிக்சர்ஸின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் திருப்பூர் தொழிலதிபர்கள் சோமு மற்றும் எஸ்.கே.மொய்தீன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது,

சினிமா உலகத்துக் கூத்தையும், துரோகத்தையும் கண்ட கலைஞர் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டார். இரவும் பகலும் கண்விழித்து, கஷ்டப்பட்டு பக்கம் பக்கமாக வசனம் எழுதிக் குவித்தது இவர். பெயரையும் புகழையும் தட்டிக்கொண்டு போவது வேறொருவர்.

நொந்து நூடுல்ஸ் ஆகிப்போன கலைஞர் தன் மனைவி பத்மாவதியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் திருவாரூருக்கே வந்துச் சேர்ந்தார். தன் நண்பர் கருணை ஜமாலிடம் தன் சோகத்தைக் கூறி புலம்பினார். அவரைத் தேற்றி ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து உற்சாகப்படுத்தினார் கருணை ஜமால்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

உடைநெகிழ்ந்தவனுடைய கை எப்படி உடனே சென்று உதவி காக்கின்றதோ அதுபோல உற்ற நண்பனுக்குத் துன்பம் வருகையில் ஓடிச் சென்று துன்பத்தைக் களைவது நட்பு என்ற நட்பு அதிகாரத்திற்கு இணங்க செயற்பட்டவர் கருணை ஜமால்.

கருணை ஜமாலின் முயற்சியால் 14-01-1948 முதல் முரசொலி ஏடு திருவாரூரிலிருந்து அவரது சொந்த அச்சகத்திலேயே வெளியிடப்பட்டது.

நண்பனுக்காக தோளோடு தோள் நின்று, அவரே மேற்பார்வையிட்டு பத்திரிக்கை பிரதிகளை அச்சிட்டுக் கொடுத்தார். தன் சொந்தப் பணத்தில் காகிதங்கள் கொள்முதல் செய்வது முதல், கலைஞருடன் சேர்ந்து பத்திரிக்கைகளை மூட்டைகளாக கட்டி தலையில் சுமந்து, ஆற்றை நீந்திக் கடந்து விநியோகம் செய்வது வரை அவரது வேலை. விற்பனையாளர்களுக்கு அனுப்பி, அதன்பின் தனக்குச் சேர வேண்டிய செலவுத் தொகையை பெற்று, கலைஞருக்கு தன்னால் ஆன உதவியைச் செய்தார்.

முரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் பத்திரிக்கை கட்டுகளை சுமந்துச் சென்று விற்பனையாளர்களிடம் சேர்ப்பது வழக்கம். முரசொலி பத்திரிக்கையின் ஆரம்ப காலத்தில் திருவாரூர் தென்னன், சி.டி.மூர்த்தி, முரசொலி சொர்ணம், பெரியண்ணன் போன்றவர்களுக்கும் முரசொலி பத்திரிக்கையின் வளர்ச்சியில் பெரும் பங்குண்டு

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்பதுபோல் கருணை ஜமால் தக்க நேரத்தில் புரிந்த இந்த உதவி கலைஞரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது.

பத்மாவதியை கலைஞர் மணமுடித்தது 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இவர்களுக்குப் பிறந்த மகன் மு.க.முத்து. 1948 செப்டம்பர் மாதம் முதல் மனைவி பத்மாவதி மறைந்த பின்பு தயாளு அம்மாள் அவர்களை மறுமணம் புரிய முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் அவரது ஆத்ம நண்பர் கருணை ஜமால்.

கருணை ஜமால் தமிழார்வலர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும்கூட. நாடகக் கலையில் ஆர்வமுள்ளவர். அரங்கண்ணல், கருணை ஜமால், தஞ்சை ராஜகோபால் போன்றோர் திருவாரூர் தேவி நாடக சபாவில் நடிகர்களாக இருந்தவர்கள்.

அப்போது தேவி நாடக சபாவில் பாடல் மற்றும் கதை எழுதும் பொறுப்பில் இருந்தவர் கவி. கா.மு.ஷெரீப். திருவாரூரில் “ஒளி” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் நடத்தி வந்தார்.

கா.மு.ஷெரீப்புக்கு தேவி நாடகக் சபாவில் நல்ல செல்வாக்கு இருந்தது. கலைஞரின் திறமையைக் கண்டு தேவி நாடக சபாவில் சேர்த்து விட்டது கா.மு.ஷெரீப் அவர்கள்தான். இங்குதான் “மந்திரிகுமாரி” நாடகம் முதலில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்திற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் மேலாளர் எம்.ஏ.வேணுவையை அழைத்துவந்து பார்வையிட வைத்தார். அதன்பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி..ஆர்.சுந்தரத்திடம் அறிமுகம் செய்து வைத்து மந்திரிகுமாரி (1950) படத்தில் இமாலயப் புகழை கலைஞருக்கு பெற்றுத்தர மூல காரணமாகத் திகழ்ந்தவர் கவி.கா.மு.ஷெரீப் என்பது எல்லோரும் அறிந்த வரலாறு.

“நெஞ்சுக்கு நீதி” சுயசரிதத்தில் கா.முஷெரீப், கருணை ஜமால் இந்த இருவரின் பெயர்களையும் கலைஞர் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை. குறளோவியம் தந்தவருக்கு ‘செய்ந்நன்றி’ பாடம் நடத்த வேண்டுமா என்ன?

கருணை ஜமால் உதவியோடு கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் குறுகிய காலத்தில் “முரசொலி” இதழானது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அண்ணாவின் திராவிடக் கொள்கையை பறைசாற்ற ஏதுவாக இருந்தது.

இதில் இன்னொரு சுவையான தகவலும் நாம் அறிய வேண்டியது அவசியம். கலைஞர் அவர்கள் தன் எழுத்துக்கள் மூலம் அண்ணாவின் கவனத்தை ஈர்த்து பரிச்சயம் அடைந்திருந்தாலும் அவரை முதன் முதலாக நேரில் சந்தித்து அறிமுகமானது எந்த இடத்தில் தெரியுமா? திருவாருரில் நடந்த ஒரு மீலாது விழாவின்போதுதான். அப்பொழுது இஸ்லாமியப் பெருமக்கள் மீலாது விழாவுக்கு அறிஞர் அண்ணாவை வரவழைத்து பேசச் செய்வது ஒரு TREND ஆகவே இருந்தது

இந்திராகாந்தியின் ஆட்சியில் எமர்ஜென்ஸி நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக கட்சியினர் பலரும் மிசா சட்ட்த்தில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். கலைஞர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். அந்த அடைக்கும்தாழ் ஒரு கட்டத்தில் செல்லுபடியாகவில்லை. அப்படிப்பட்ட அடக்கமுறை நேரத்திலும் தன் நண்பர் கருணை ஜமால் வீட்டுத் திருமணத்துக்கு திருவாரூர் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்ற பாங்கு இருவருக்குமிடையே நிலவிய நெருங்கிய நட்புக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்?

#அப்துல்கையூம்

தமிழ்ப்பெயர்கள் தாங்கிய ஊர்கள்

ஊர்களின் பெயர் மாற்ற நிகழ்வால் சில அழகான தமிழ்ப்பெயர்கள் தாங்கிய ஊர்கள் நமக்கு அறியக் கிடைத்தன

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஊர்
“நாயகனைப்பிரியாள்”
“அணில் குதிச்சான் பூவானிப்பட்டு”

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே
“சுள்ளெறும்பு”

திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில்
“நெற்குப்பை”

புதுச்சேரியில் இருந்து மைலம் செல்லும் வழியில்
“கண்ணியம்”.

தூத்துக்குடியிலிருந்து மதுரை செல்லும் வழியில்
“எப்பொதும் வென்றான்”

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே
“படந்தால்”

(பெரிய ஆலமரம் அவ்வூரில் இருந்ததாம். “படர்ந்த ஆல்” மருவி படந்தால் என்று ஆகிவிட்டது)

திருச்சி என்ற பெயர் எப்படி வந்தது?

திருச்சி என்ற பெயர் எப்படி வந்தது? பலருடைய மனதிலும் எழும் கேள்வி இது.

11-ஆம்நூற்றாண்டில் நத்தர்ஷா வலி என்ற இறைநேசர் அரேபியாவிலிருந்து இங்கு வந்து அடக்கம் ஆகி இருப்பதால் பள்ளிவாசல் என்ற பெயரில் உள்ள பள்ளி என்பது இப்பெயருடன் இணைந்திருக்கலாம் என்று கூட நான் நினைத்ததுண்டு. அப்படியிருக்க வாய்ப்பில்லை. நத்தர்ஷா வலியுல்லா என்ற ஆன்மீகப் பெரியவர் வாழ்ந்த காலம் 969 – 1039.

ஆனால் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேவாரப் பாடலில் சிராப்பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதோ அப்பாடல் :

//நன்றுடை யானை தீயதில் லானை நரைவெள்ளே(று)
ஒன்றுடை யானை யுமையொரு பாகமுடையானைச்
சென்றடையாத திருவுடை யானை சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் னுள்ளங் குளிரும்மே.//

ஊரின் பெயர்க் காரணத்திற்கு கூறப்படும் மற்றொரு கதை இது :

இராவணனுக்கு பத்து தலை என்று கூறுகிறது புராணம். அதுபோல இராவணனுடைய மகன் திரிஷூருக்கு மூன்று தலையாம். அவன் இங்கு வந்துதான் சிவனை வேண்டி தவம் இருந்தானாம்.

திரி என்றால் மூன்று, சிரா என்றால் தலை. பள்ளி என்றால் தவம். திரி+சிரா+பள்ளி என்கிறார்கள்.

திரு அரங்க நாதன் அருகாமையில் பள்ளி கொண்டுள்ளதால் இப்பெயர் என்கிறார்கள் மற்றும் சிலர்.

ஆனால் பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து வேறுவிதமாக இருக்கிறது.

பள்ளி என்ற சொல் சமண வழிபாட்டுடன் தொடர்புடையது என்பது தெளிவான கருத்து. சிரா எனும் சமணத்துறவி இங்கே வாழ்ந்தார் என்றும் அவர் அங்கு சமண மடம் வைத்திருந்தார் என்றும் கூறுகிறார்கள்.
அதுவே திரு + சிரா + பள்ளி என்றானது என்கிறார்கள். (திரு என்பது மரியாதைக்கான சொற்பதம்)

“சாப்பாடு போடப்படும்” என்று பெயர்ப்பலகையில் எழுதியிருந்ததை ஒரு வழிப்போக்கன் “சாப்பா – டுப்போ – டப்பா – டும்) என்று படித்தானாம்.

அதுபோல சம்பந்தமே இல்லாமல் திரு+சிரா+பள்ளியில் காணப்படும் “சி” என்ற எழுத்து திருவோடு ஒட்டிக்கொண்டு “ச்சி “ ஆகி, இந்த மலைக்கோட்டை மாநகர் “திருச்சி” என்று அலங்கோலமாகிவிட்டது.

#அப்துல்கையூம்

பாங்கும் ராகமும்

தொழுகைக்காக அழைப்புவிடும் பாங்கோசை அனுதினமும் ஐவேளை நாம் கேட்கிறோம். அதில் ராகம் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் இருக்கிறது.

பாங்கு சப்தத்தை ஒலித்தல் என்று சொல்வதா, அல்லது இசைத்தல் என்று சொல்வதா என்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. பாங்கினை ஒலிப்பவர் இந்தச் சுருதியில்தான் தொடங்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவர் ஒலிக்கத் தொடங்குவது ஏதோ ஒரு குறிப்பிட்ட சுருதியில் என்பது மட்டும் நமக்கு நன்றாக புரிகிறது.

ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக்க விரும்புகிறேன். பாங்கினை யாரும் இந்த ராகம், அந்த ராகம் என்று நினைத்துக் கொண்டு ஓதுவதில்லை. அதேசமயம் பாங்கில் ஏதோ ஒரு ராகம் ஒளிந்திருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

பாவ மன்னிப்பு படத்தில் “எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாட்டிற்கிடையில் பாங்கு சப்தம் ஒலிக்கும். பொதுவாக சிவரஞ்சனி, சிந்துபைரவி அல்லது கீரவாணி ராகத்தில் ஒலிக்கப்படும் பாங்கோசையை சற்றே மாற்றி மாய மாளவ கெளளை ராகத்தில் நாகூர் ஹனிபாவை எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கச் செய்திருப்பார். அப்போதே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அதெப்படி பாங்கினை வழக்கத்திற்கு மாறாக வேறு ராகத்தில் நீட்டி முழக்கலாம் என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

திருநெல்வேலியில் ஒரு முஅத்தின் அதிகாலை நேரத்து பாங்கினை பூபாள ராகத்தில் ஓதுவதாக இசையறிஞர் நண்பர் ஹாஜி பால் கூறுகிறார். இவர் பண்டைய காலத்து தமிழ்க் கலாச்சாரங்களில் காணப்படும் வெவ்வேறு தாள வகைகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

நைஜீரியாவில் திருமறையை ஒருவர் மோகன ராகத்தில் இனிமையாக ஓதுவதை அண்மையில் காணொளி ஒன்றில் கண்டேன். இன்னொரு காணொளியில் ஒரு மலையாளி சகோதரர் ஒருவர் ஒரே திருமறை அத்தியாயத்தை பல ராகங்களில் பெயர் குறிப்பிட்டு ஓதுவதைக் கேட்டுக் களித்தேன்,

பாங்கோசையில் ஆரோகணமும் உண்டு அவரோகணமும் உண்டு. ஏற்ற இறக்கம் கொண்டதுதானே பாங்கோசை? அரபு வாக்கியங்களை உச்சரிக்கையில் எந்த இடத்தில் நீட்டி முழக்க வேண்டும் எந்த இடத்தில் தாழ்த்தி உச்சரிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உண்டு.

பாங்கு என்றாலே தமிழில் பக்குவம் அல்லது நயம் என்றுதானே பொருள்? “ராக ஆலாபனை பாங்காக இருந்தது” என்று சொன்னால் நயமாக இருந்தது, தன்மையாக இருந்தது என்றுதானே பொருள்?

ராகத்தின் பெயர்கள் மட்டுமே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் ராகம் என்பது இறைவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது என் கருத்து. ஒரு குறிப்பிட்ட சுருதிகளின் சேர்க்கைதான் ராகம் என்பது. அது ஏற்ற இறக்கம் கொண்டது. அப்படி பார்த்தால் காலையில் எழுந்ததும் நம் காதுகளில் ஒலிக்கும் சேவலின் கூவல் முதற்கொண்டு, பகலில் வண்டுகள் முழக்கும் ரீங்காரம் முதற்கொண்டு, இரவில் நீர்க்குட்டைகளில் தவளைகள் எழுப்பும் சப்தங்கள் வரை எல்லாமே ராகம்தான். அவைகளுக்கு சுரத்தோடு ஒலிக்க கற்றுக் கொடுத்தது மனிதன் அல்லவே?

காலை, நன்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு பொழுதுகளுக்கும் ஏற்றவாறு இராகங்கள் வகைப் படுத்தப்பட்டுள்ளன. அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் பூபாளம் என்றும் அந்தி மாலையில் கேட்க வேண்டிய ராகம் சக்கரவாகம் என்றும் சொல்கிறார்கள்.

இன்னும் துல்லியமாக குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் காலை 5-6 மணிக்கு பூபாளம், 6-7 மணிக்கு பிலஹரி, 7-8 மணிக்கு தன்யாசி, 8-10 மணிக்கு ஆரபி, சாவேரி, 10-11 மணிக்கு மத்யமாவதி, 11-12 மணிக்கு மனிரங்கு 12-1 மதிய நேரத்தில் ஸ்ரீராகம், 1-2 மணிக்கு மாண்டு, 2-3 மணிக்கு பைரவி/ கரகரப்பிரியா 3-4 மணிக்கு கல்யாணி/ யமுனா/ கல்யாணி, மாலை 4-5 மணிக்கு காம்போதி/ மோகனம்,/ ஆனந்த பைரவி/ நீலாம்பரி, மலையமாருதம்/ பியாகடை/ மலையமாருதம் என பகுத்தறிந்து வைத்திருக்கிறார்கள்.

மழை வேண்டி இசைப்பது அமிர்தவர்ஷினி, கல் நெஞ்சத்தையும் கரைய வைக்க அரிகாம் போதி, டென்ஷனைப் போக்க ஆனந்த பைரவி/ ஸ்ரீ ரஞ்சனி/ கமாஸ், நாயகி/ சகானா/ நீலாம்பரி, மன அழுத்தத்தைக் களைய போக்க அம்சத்வனி/ பீம்பிளாஸ் என்று வகை வகையாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.

அக்பர் அவையில் சங்கீதச் சக்கரவர்த்தி தான்சேன் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்த நிகழ்வை படித்த ஞாபகம்.

அசுனம் என்ற ஒரு பறவையைப் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, அப்பறவை இசையை வெகுவாக ரசிக்கும். அதே சமயத்தில் கொடிய இசையை கேட்க நேரிட்டால் உயிரை விட்டுவிடும்

“விழுந்த மாரிப் பெருந்தன் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயம்வரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஒர்க்கும்”
நற்றிணை (244 வது பாடல்) – கூற்றங் குமரனார் எழுதியது.

பாங்கோசையிலும் திருமறை ஓதுதலின் போதும் ராகம் முக்கியம் என்பது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இனிமையான ராகத்தில் ஓதப்படுபவை மனதை சாந்தப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

#அப்துல்கையூம்

டிக்.. டிக்.. டிக்..

%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d

டிக்.. டிக்.. டிக்..

இதனைப் படிக்கையில் பலருக்கும் 1981-ல் பாரதிராஜா எடுத்த குற்றப்புனைவு திரைப்படம்தான் சட்டென்று நினைவில் வரும்.  ஆனால், என் நினைவில் நிழலாடுவதோ  எம்.ஜி.ஆர். கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தின் “டிக்… டிக்.. டிக்…” ஓசைதான்.

இதற்கு முன் நானெழுதிய பதிவில் கங்கை அமரனுக்கு எம்.ஜி.ஆர். பரிசளித்த கைக்கடிகாரம் “ரோலெக்ஸ்”வாட்ச் என எழுதியிருந்தேன். உண்மையில் அது “ரோலெக்ஸ்”  வாட்ச் கிடையாதாம். “ஒமேகா” வாட்ச்சாம். அதுதான் துல்லியமான தகவலும் கூட. (நானும் என் பதிவில் மாற்றம் செய்து விட்டேன்) OMEGA-வும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் என்பதில் சற்றும் ஐயமில்லை.

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்? நதியின் ஒளியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா.. ?
அடடா ……..

“புன்னகை மன்னன்” படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலை நான் கேட்கும்போதுகூட எம்.ஜி.ஆருடைய  கைக்கடிகாரம்தான் என் மனக்கண்முன்  வந்து ஊஞ்சலாடும்.

மூன்று வருடங்களுக்கு முன்பு  யாரோ கிளப்பி விட்ட ஒரு ‘அண்டப் புளுகு.. ஆகாசப் புளுகு’ , அது வைரலாக பரவி எம்.ஜி.ஆர். ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அந்த புரளி வேறு ஒன்றும் இல்லை.

எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து  “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் ஓடும் சத்தம் கேட்கிறது என்பதுதான்.

mgr-watch

தென் மாநிலங்களில் இருந்தெல்லாம் இந்த “டிக்… டிக்.. டிக்..” சத்தத்தைக் கேட்டு தரிசனம் பெற எம்.ஜி.ஆரின் பக்தக்கோடிகள் எம்.ஜி.ஆர். சமாதிக்கு சுற்றுலா வந்தார்கள்.  சூடம் ஏற்றினார்கள். சில ‘பக்தர்கள் “இன்னும் எம்.ஜி.ஆர். சாகவில்லை;  அது அவரது இதயத்துடிப்பு” என்றுகூட சீரியஸாக நம்பினார்கள்.

எனக்கு அறிமுகமான தமிழ் நண்பர் ஒரு SECOND HAND ROLEX WATCH DEALER. ஒருமுறை அவருடைய கடையில் வைத்திருந்த  ரோலெக்ஸ் வாட்சை  என் கையில் வாங்கி; காதில் வைத்து, அதில்  “டிக்..டிக்..டிக்….” சத்தம் வருதா என்று பார்த்தேன்.

“பேட்டரியால் இயங்கும் QUARTZ வாட்ச்சில் மாத்திரம்தான்  “டிக்..டிக்..டிக்..” சத்தம் வரும்.  சுவிட்ஸர்லாந்தில் தயாராகும் ரோலெக்ஸ் போன்ற விலையுயர்ந்த வாட்ச்சின் உள்ளே இருப்பது தானியங்கி AUTOMATIC  இயந்திரங்கள்.  இரண்டு நாட்கள் அசைவில்லாமல் இருந்தால் அதுவே  தானாகவே நின்றுவிடும்.”

உமா ஷங்கர் ரேஞ்சுக்கு ஒரு பிரசங்கத்தையே அவர் நடத்தி முடித்தார். நான் மேலே கொடுத்திருப்பது அதன் வெறும் சுருக்கும்தான்.

“பிரதர் ..!  நீங்க இப்படி சொல்றீங்க. ஆனா.. எம்.ஜி.ஆர். வாட்ச் இன்னும் “டிக்….டிக்..டிக்..”  என்ற சத்தத்துடன் ஓடிக்கிட்டுத்தானே இருக்கு. அது எப்படி..?

அசடாட்டம்  நான் ஒரு கேள்வியை எடுத்துப் போட்டேன்.  மனுஷன் ஏற இறங்க என்னை ஒரு மாதிரி பார்த்தார்.

“யோவ்.. உன்னைப் பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கு.  லூசாய்யா நீ? காலங்காத்தாலே ஏன்யா என் பிராணானை வாங்குறே?” என்று மனசுக்குள் புலம்பிய அவருடைய மைண்ட் வாய்ஸை என்னால் மானசீகமாக கேட்க முடிந்தது.

ஒரு வேற்றுக்கிரக ஆசாமியைப் பார்ப்பது போல மீண்டும்   ஒரு ஏளனப் பார்வையை என் மீது எடுத்து வீசினார். எனக்கே சற்று “ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்” ஆகிவிட்டது,

சில  வருடங்களுக்கு  முன்பு எம்.ஜி.ஆர். சமாதியின் பளிங்கு மேடையை ஒரு வாலிபர் தகர்த்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து போலீஸ் அங்கு விரைந்தனர். அந்த வாலிபரை பிடித்து போலீஸ் விசாரித்தபோது அவர் பெயர் ராமச்சந்திரன் என்றும் ; அவர் திருத்தணியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

“எம்.ஜி.ஆர். சமாதிக்குள் வாட்ச்  இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வாட்சை எடுப்பதற்காக சமாதியை உடைத்தேன்”என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.

mgr-watch-2

எம்.ஜி.ஆர். சமாதிக்குள்ளிருந்து வரும் “டிக்.. டிக்.. டிக்..”  சத்தத்தைக் கேட்க வரும் எம்.ஜி.ஆர். அபிமானிகளை சந்தித்து பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுத்து வெளியிட்டது.

”வாரத்துக்கு ரெண்டு வாட்டி தலைவரோட சமாதிக்கு வந்துடுவேன். தலைவருக்காக ஸ்பெஷலா அமெரிக்காக்காரன் கண்டுபிடிச்சது அந்த வாட்ச். அதான் தலைவர் இறந்த பிறகும் வாட்ச் ஓடிட்டு இருக்கு. ஆனா, எங்கப்பா, ‘இன்னும் எம்.ஜி.ஆர். சாகலேங்கிறாரு… அது வேற குழப்பமா இருக்கு!” என்றாராம் பெயிண்டர் வேலை பார்க்கும் சுந்தர் என்ற வாலிபர்.

”புரட்சித் தலைவர், நம்ம நாட்டைப் பத்தின எல்லா ரகசியங்களையும் வாட்ச்சுக்குள்ளதான் வெச்சிருந்தாரு. அதைத் திறந்தா, நம்ம நாட்டு ரகசியம் எல்லாம் லீக் ஆயிடும்னு வாட்சை அவர்கூடவே புதைச்சுட்டாங்க” என்றாராம் இன்னொருவர்.

எஸ்.வி.சேகர் நாடகத்தில் ஒரு ஜோக் வரும். “சூப்பர் மேனுக்கும் ஜென்டில்மேனுக்கும் என்ன வித்தியாசம்”?..

“பேண்டுக்கு மேல ஜட்டி போட்டா சூப்பர் மேன், பேண்டுக்கு உள்ளார ஜட்டி போட்டா அது ஜென்டில்மேன்”என்று பதில் வரும்.

நம்ம ஆளுங்கதான் பாட்டுக்கு எசப்பட்டு பாடுபவர்கள் ஆயிற்றே.  இந்த ஜோக்குக்கு தொடர் ஜோக் ஒன்றும் இயற்றினார்கள்

“அதான் இல்ல, ‘சூப்பர் மேன்’ இங்கிலீஷ் படம், ‘“ஜென்டில்மென்’ தமிழ்ப்படம்” என்று எழுதி.. “யாருகிட்ட…???” என்ற  முத்தாய்ப்பு வேற.

எம்.ஜி.ஆர். சற்று மாறுபட்ட மனிதர்.  நாம கையிலே வாட்ச் கட்டி அதுக்கு மேலை முழுக்கைச் சட்டை போடுவோம். ஏனென்றால் நாம்  Ordinary Man.    வாத்தியார் முழுக்கை சட்டை அணிந்து அதுக்கு மேலே வாட்ச் கட்டுவார். ஏனென்றால் அவர் சூப்பர் மேன்.

நாம இடது கையில் வாட்ச் கட்டுவோம். அவர் வலது கையில் கட்டுவார்.  ஏனென்றால் அவர் ஆயிரத்தில் ஒருவன்.

ஒவ்வொரு பிரபலங்களுக்கும் ஒரு பிரத்தியேக ஸ்டைல் இருக்கும். நாஞ்சில் மனோகரன் கையில் “மந்திரக்கோல்”.  கலைஞருக்கு கறுப்புக் கண்ணாடி.  தமிழ்வாணனுக்கு தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும்.

எம்.ஜி.ஆருக்கோ பட்டு வேட்டி, பட்டு முழுக்கைச் சட்டை.

கறுப்புக் கண்ணாடி  ஜெர்மன் தயாரிப்பு . கோலாலம்பூர் நண்பர் வழங்கிய FUR தொப்பி.  காஷ்மீர் மன்னர் பரிசளித்த ‘பஷ்மினா’ சால்வை.  துபாய் அன்பர் தயாரித்து அனுப்பும் காலணி. சுவிட்ஸர்லாந்தில் தயாரிக்கப்படும் கைக்கடியாரம். இதுதான் அவரது டிரேட் மார்க்.

எம்.ஜி.ஆருக்கு விதவிதமான உயர் ரக கைக்கடிகாரங்களை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ரோலெக்ஸ், ஒமேகா. ரேடோ, பதேக் பிலிப்ஸ், ஃபேவர் லுபா, மோண்ட் ப்ளாங்க்  இதுபோன்ற – குறிப்பாக chronograph watches – அவரிடம்  ஏராளமாக  இருந்தன. ராமாவரம் தோட்டத்தில் அவர் பயன்படுத்திய சில  பொருட்களை கண்காட்சியாக வைத்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆரிடம் உள்ள கெட்ட பழக்கம் என்னவென்றால் அவர் உணர்ச்சிவசப்பட்டு விட்டால், பிரியப்பட்ட யாருக்காவது தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்து, அவர்களை அன்பினால் திக்கு முக்காடச் செய்துவிடுவார்.

இப்படி பரிசுபெறும் அதிர்ஷ்டம் கங்கை அமரனுக்கு மாத்திரமல்ல, எத்தனையோ பேர்களுக்கு வாய்த்திருக்கிறது.

“கலங்கரை விளக்கம்” படத்திற்காக எம்.ஜி.ஆர்.  முன்னிலையில்  காதல் பாட்டு ஒன்றுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போய் விடுகிறது.  அப்போது அருகில் அமர்ந்திருக்கும் பாடலாசிரியர் வாலிக்கு எம்.ஜி.ஆர். ஒரு பரிட்சை வைக்கிறார்.

“இந்த இசைக்கு 15 நிமிடத்தில் பாடல் எழுதித் தந்துவிட்டால்  என் கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தை   பரிசாகத் தந்து விடுகிறேன்” என்று கூறுகிறார்.  சவாலை ஏற்றுக் கொண்ட வாலி ‘கிடுகிடு’வென்று குறிந்த நேரத்தில் பாடலை எழுதி முடிக்க , வாலியின் கையில் எம்.ஜி.ஆர். தனது விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கட்டிவிட கவிஞருக்கு அடிக்கிறது ஜாக்பாட் பரிசு.

அப்படி உருவான பாடல்தான் இது:

நான் காற்று வாங்க போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் – அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்த
கன்னி என்ன ஆனாள்..

அதனைத் தொடர்ந்துவரும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை

வாலிக்கு இதுபோன்ற சவால்கள் அல்வா சாப்பிடுவது போன்றது.

கலைஞரின்  மூத்த மகன் மு.க. முத்துவை நடிக்க வைத்து தயாரிக்கப்பட்ட . ‘பிள்ளையோ பிள்ளை’ தொடக்கவிழாவுக்கு எம்.ஜி.ஆரே நேரில் வந்து வாழ்த்தினார். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக களத்தில் இறக்கப்பட்டிருக்கும் பந்தயக்குதிரை மு.க.முத்து என்று நன்கு அறிந்து வைத்திருந்தபோதும்,  பட வெளியீட்டு சிறப்புக்காட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். தனது கைக்கடிகாரத்தை  அவருக்கு  பரிசாக அளித்துவிட்டுச் சென்றார்.

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! – நீ

மூவேந்தர் வழிவந்த மன்னவனோ!

இப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் வரிகளை கேள்வியுற்ற எம்.ஜி.ஆர். “ஏன்யா எனக்கு எழுதும்போதெல்லாம் இந்த மாதிரி சொற்கள் உனக்கு வந்து விழவில்லையா..?” என்று கவிஞர் காளியை செல்லமாகக் கடித்துக் கொண்டாராம்.

கல்லக்குடி போராட்டத்திற்குப்பின் திருச்சியில் சிறைவாசத்தை முடித்துவிட்டு சென்னை இரயில் நிலையத்திற்கு கலைஞர் வருகிறார்.  கூட்ட நெரிசலிலிருந்து அவரை பாதுகாக்க வேண்டி எம்.ஜி.ஆர் அவரை குண்டுகட்டாகத் தூக்கியபோது, எம்.ஜி.ஆருடைய “ரேடோ” வாட்ச் கீழே விழுந்து காணாமல் போனது.

“அடடா.. என்னாலே உங்களது வெளிநாட்டு கைக்கடிகாரம் காணமல் போய்விட்டதே..?” என்று கலைஞர் பதறிப்போனபோது எம்.ஜி.ஆர். பதட்டப்படாமல் சொன்னது “வெளிநாட்டு கடிக்காரம் போனால் என்ன? உள்நாட்டுத் தலைவர் உங்களைக் காப்பாற்றிய சந்தோஷத்திற்கு எத்தனை கடிகாரத்தையும்  நான் இழக்கத் தயார்”.  எம்.ஜி.ஆரின் அன்பின் வெளிப்பாட்டுக்கு இதுவும் ஒரு TIP OF THE ICEBERG.

mgr-5

எம்.ஜி.ஆர். மரணித்து கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் எம்.ஜி.ஆர் சமாதிக்குள் காதை வைத்து அந்த “டிக்.. டிக்.. டிக்..” சத்தத்தை உருவகப்படுத்தி உளம் மகிழும் பக்தக்கோடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்துல் கையூம்

31.10.2016

எம்.ஜி.ஆரும் கீழக்கரை வர்த்தகர்களின் தொடர்பும்

10885171_1014053881942809_1168570525514526043_n

ஆ.மு. அஹ்மது யாசீன் காக்கா சினிமாத் துறையில் செல்வாக்கு பெற்ற  மனிதராகத் திகழ்ந்த நேரமது. சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆர்., பாலாஜி போன்றவர்களின் படங்களுக்கு பணமுதலீடு தந்து உதவியவர்.

“சேனா ஆனா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்கள் நிறுவிய “கிரஸெண்ட் ரெசிடென்ஷியல் ஸ்கூல்” முதல் பேட்ச் மாணவர்கள் 19 பேர்களில் நானும் ஒருவன். ஒருசமயம் கால்பந்தாட்டம் விளையாடும்போது எனது ஒரு கண்ணில் பலமாக அடிபட்டு கண்திரை (Retinal Detachment) முழுவதுமாக கிழிந்து பார்வை பறிபோய்விட்டது.

எக்மோர் கண் ஆஸ்பத்திரியில் அந்தக் காலத்தில் மிகச்சிறந்த கண்மருத்துவர்களாக புகழ்பெற்றிருந்த டாக்டர் ஆபிரகாம் மற்றும் டாக்டர் C.P.குப்தா இவர்கள் அறுவை சிகிச்சை செய்து என்னை முழுவதுமாக குணப்படுத்தி பார்வையை மீட்டுத் தந்தார்கள். (லேசர் அறுவைசிகிச்சை நவீனமாக அறிமுகமான நேரம்)

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனை படுக்கையில் நான் கண்விழித்து பார்த்தபோது, ஆறுதல் கூற என்னருகே இரண்டு ஆளுமைகள் வெகுநேரம் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் கல்வித்தந்தை பி.எஸ்.ரஹ்மான் அவர்கள். மற்றொருவர் யாசீன் காக்கா அவர்கள். தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவர்கள் கருதினார்கள்.

ஒருமுறை எனக்கு தமிழ்மொழியில் இருந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டு “நீ தமிழ் இலக்கியம் எடுத்துப்படி.  நீ நல்லா வருவே,,!” என்று ஆலோசனை நல்கியவர்” யாசீன் காக்கா.

கல்வித்தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் நிறுவிய சீதக்காதி டிரஸ்டுக்கு சொந்தமாக அப்போது பல நிறுவங்கள் இருந்தன. பாரி இண்டஸ்ட்ரீஸ், ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஒமேகா கேபிள்ஸ், பினாங்கில் UMPTC, இப்படி எத்தனையோ நிறுவனங்கள். ஒமேகா கேபிள்ஸ் நிர்வாகியாகவும் பங்குதாராராகவும் யாசீன் காக்கா செயல்பட்டார்கள்

அப்துல் ரஹ்மான்

மாணவர்களாகிய எங்களிடம் பொதுஅறிவு கேள்வி கேட்கும் சேனா ஆனா (உடனிருப்பவர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்)

இன்னொருமுறை “Which City is called Pink City?” என்று பொதுஅறிவு கேள்வி கேட்டுவிட்டு “ஜெய்ப்பூர்” என்று நான் சரியாக பதில் சொன்னதற்கு, அப்துல் வஹ்ஹாப் அவர்கள் எழுதிய “தித்திக்கும் திருமறை” என்ற நூலை கையொப்பமிட்டு பரிசாக அளித்தார்கள் சேனா ஆனா அவர்கள்.. அந்த மாமனிதரின் கையால் வாங்கிய நினைவுப்பரிசை இன்றும் போற்றி பாதுகாத்து வருகிறேன்.

கீழக்கரை முஸ்லீம் வணிகர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் சினிமா தொடர்பு உள்ளவர்களாக இருந்தார்கள். பிறகுதான் அது “ஹராம்” (இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று)  என்று கூறி ஒவ்வொருவராக சினிமாத்துறையிலிருந்து விலக ஆரம்பித்தனர். பிற்காலத்தில் முழுவதுமாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள்.

வரலாறு கூறும் செம்பி நாடு மற்றும் சேதுச் சீமையை நினைவுறுத்தும் வகையில் “செம்பி பிலிம்ஸ்”, “சேது பிலிம்ஸ்”, என்று தங்கள் நிறுவனங்களுக்கு பெயர் சூட்டியிருந்தார்கள்.  பிறந்த மண்ணை போற்ற வேண்டும் என்பதற்கு அவர்கள் சிறந்த உதாரணம்.

வளநாடு சினி ரிலீஸ், கிரஸெண்ட் மூவீஸ், வச்சிர நாடு பிலிம்ஸ் , கிரவுன் அட்வைடைஸிங்  இவைகளும் திரைப்படத் துறையில் வெற்றிக்களம் கண்டன.

விநியோகத்திற்காக வாங்கும் படங்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜி நடித்த படங்களாகவே இருக்கும். எம்.ஜி.ஆர்.,  சிவாஜி, படங்களைத் தவிர வேறு நடிகர்கள் நடித்த படங்களை வாங்க மாட்டார்கள். கையைக் கடித்துவிடும் என்பதால். 1970 – 1980 கால கட்டங்களில் தமிழகத்தில் வெளிவந்த ஏராளமான படங்கள் இவர்களின் தொடர்பு இல்லாமல் ‘ரிலீஸ்’ ஆனதில்லை.

திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் இவர்களின் விநியோகஸ்த நிறுவனங்கள் பரவலாக இருந்தன. திருச்சி பாலக்கரையில் உள்ள “வளநாடு சினி ரிலீஸ்” அலுவலத்திற்கும் மதுரையிலிருந்த “சேது பிலிம்ஸ்” அலுவலகத்திற்கும் நான் சென்றிருக்கிறேன்.

சினிமாத் துறையில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, “செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ்” நிறுவனத்தின் மேலாளர்.

சேனா ஆனா, எம்.ஜி.ஆர்., நீதிபதி மு.மு.இஸ்மாயீல், யாசீன் காக்கா

மேற்கூறிய பல சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களின் பங்குதாரராக யாசீன் காக்காவும் இருந்தார்கள்.

பெரிய நடிகர்கள் இல்லாதபோதும், “யாருக்காக அழுதான்” படமெடுத்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் படத்தயாரிப்புக்கும் வினியோகத்திற்கும் பணஉதவி புரிந்தவர் யாசீன் காக்கா.  பெருத்த நட்டம் அதில் ஏற்பட்டபோதும் அதைப்பற்றி சிறிதும் கவலையுறாது “வியாபாரத்தில் இதுவெல்லாம் சகஜம்” என்று கூறி தொடர்ந்து தன் பணியில் கவனம் செலுத்தியவர்.

நடிகர் கே.பாலாஜியின் “சுஜாதா சினி ஆர்ட்ஸ்” படங்களுக்கு பைனான்ஸ் செய்தது யாவுமே யாசீன் காக்காதான். அடிக்கடி எங்கள் பள்ளிக்கு அவர் வருவார். அவர் விநியோகம் செய்த திலிப் குமார் நடித்த “கோபி” இந்திப்படம், தயாரித்த எங்கிருந்தோ வந்தாள்”  போன்ற படங்களை PREVIEW THEATRE- ல் படம் வெளியாவதற்கு முன்னரே   பார்க்கின்ற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

எம்.ஜி.ஆர்.அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி  புதுக்கட்சி தொடங்க ஆயத்தமானபோது அவர் செய்த முதற் காரியம் என்ன தெரியுமா? அவருக்கு பழக்கமான நண்பர்களிடம் குறிப்பாக மிகநெருக்கமாக பழகிய முஸ்லீம் பிரமுகர்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டியதுதான். கட்சிக்கு நிதிதிரட்டும் பணியில் அவர்கள் தாராளமாக அள்ளித் தந்தார்கள்.

“கல்வித் தந்தை” என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வீட்டிற்கு மக்கள் திலகம் வருகை தந்தபோது, சேனா அனா அவர்களின் துணைவியார் தமிழர் கலாச்சாரப்படி வெற்றிலை பாக்கு ஒரு தட்டையில் கொண்டுவந்து வந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.

அப்போது இரு வெற்றிலை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதையே ஒரு நல்ல சகுனமாகக் கருதி எம்.ஜி.ஆர். தன் கட்சிக்கு சின்னமாக இரட்டை இலையை பயன்படுத்தினார் என்கிறார்கள்.

unnamed

சேனா ஆனா குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆர். – ஜானகி

அதற்கு முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர் இவர்கள் வீட்டுக்கு வருகை தந்தபோது அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் அவருக்கு ஒரு தொப்பியை அணிவித்திருக்கிறார். இந்த கெட்-அப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போக, முன்நெற்றியில் ஏறிக்கொண்டிருக்கும் தன் வழுக்கையை மறைப்பதற்கு, இதையே தன் Celbrity Image-க்கு நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கியது ஒரு சிலருக்கு மட்டும்தான். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும். கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா மற்றும் அவருக்கு ரோல் மாடலாக இருந்த ஹிந்தி டைரக்டர் சாந்தாராம்.   அதேபோன்று கையோடு கைசேர்த்து, தலைகுனிந்து பவ்யமுடன் ஆசிபெற்ற அன்பர்களில் குறிப்பிடத்தக்க இருவர். 1. இரண்டாம் முறை பதவியேற்றபோது நீதிபதி மு.மு.இஸ்மாயில், 2. எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.

mgr

“சிரித்து வாழ வேண்டும் ” படத்தில் எம்.ஜி.ஆர்.

“ஜன்ஜீர்” என்ற இந்திப்படம் தமிழில் “சிரித்து வாழ வேண்டும்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது அதில் பிரான் ஏற்று நடித்த முஸ்லீம் பாத்திரத்தில் மக்கள் திலகம் நடித்தார். தன் நண்பருக்கு விசுவாசம் காட்டும் விதத்தில் அந்த பாத்திரத்திற்கு அப்துல் ரஹ்மான் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.

அத்தோடு நிற்கவில்லை. பாடலாசிரியர் புலமைப் பித்தனை அழைத்து தன் நண்பரின் பெயர் வருமாறு பாட்டை அமைக்க உத்தரவிட்டார்.

மெல்லிசை மன்னர் இசையமைக்க, டி.எம்.எஸ். பாட ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற பாடலிது:

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்

அவனே அப்துல் ரஹ்மானாம்

ஆண்டான் இல்லை அடிமை இல்லை

எனக்கு நானே எஜமானாம்

உற்ற நண்பர் ஒருவருக்கு இதைவிட ஒரு அன்பான சமர்ப்பணம் வேறு என்ன செய்ய முடியும்..?

அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வரிகள் மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இருவர்களுக்கும் இப்பவும் பொருந்தும்

வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா

உலகம் நினைக்க வேண்டும் ?

சொன்னான் செய்தான் ! என்றே நாளும்

ஊரார் சொல்ல வேண்டும் !!!

காலத்தால் அழியாத வரிகள் இவை. Hats-Off to புலமைப் பித்தன்.

“இதயக்கனி” மற்றும் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு பொருளாதார உதவி செய்தது பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்கள்தான். கீழைநாடுகளில் அதற்கான தங்கும் வசதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி போன்றவைகள் பெற்றுத் தந்தது யாசீன் காக்கா அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் இவர்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர்  “இதயம் பேசுகிறது” மணியன்.

அதற்கு முன்பு, மணியன் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்து பயணத் தொடர்கதை எழுதுவதற்கு அந்தந்த நாடுகளில் பலவகைகளிலும் உதவி செய்தவர்கள் இந்த கீழக்கரை பிரமுகர்கள். ஆனால் அவரது பயணத் தொடரில் இவர்களைப் பற்றிய குறிப்பு எதையும் மணியன் எழுதி வைத்ததாக எனக்கு நினைவில்லை.

1970-ஆம் ஆண்டில் “உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக “எங்கள் தங்கம்” படம் முடிந்த கையோடு புறப்பட வேண்டியிருந்தது. இங்கு அரசியல் சூழ்நிலையும் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று யாசீன் காக்கா உறுதியளித்த பின்புதான் எம்.ஜி.ஆருக்கு உற்சாகமே பிறந்தது.

இந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது ஏன் அப்போது கடுமையான கோபம் கொண்டிருந்தார் என்பதற்கு காரணம் உள்ளது. அப்போது பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வாசித்தவர்களுக்கு நன்றாக நினைவிருக்கும்..

மூகாம்பிகை கோயிலில் எம்.ஜி.ஆர். தனக்கு மாலையிட்டு தன்னை மனைவியாக்கிக் கொண்டார் என்ற செய்தியை ஜெயா கசிய விட்டார். அதிர்ச்சியடைந்த வீரப்பன் இதனை எம்.ஜி.ஆரிடம் சொல்ல, கொதிப்படைந்து போன அவர் தன் சகாக்களுக்கு ஜெயலலிதாவை முற்றிலும் புறக்கணிக்குமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு  கதாநாயகிகளாக மஞ்சுளா, லதா, சந்திரகலா ஆகியோர் தேர்வானபோது ஜெயலலிதா தனக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்பதற்காக பொங்கி எழுந்ததாகவும், விடாப்பிடியாக ஜெயலலிதா தன் தாயாருடன் ஜப்பான் புறப்பட்டுச் சென்றதாகவும், வீரப்பன் குழுவினர் அவரை எம்.ஜி.ஆருடன் சந்திக்க வாய்ப்பு தரவே இல்லை என்றும் அப்போதைய பத்திரிக்கைகள் “கிசுகிசு”க்களை அள்ளித் தெளித்தன. தான் நினத்ததை சாதித்துவிட வேண்டும் என்ற குணம் இயற்கையிலேயே இருந்ததை எல்லோரும் அறிவார்.

ஜெயா,  ஹாங்காங் வந்தால் அவரை யாரும் சந்திக்கவோ அவருக்கு வரவேற்போ அளிக்கக் கூடாது என்று யாசீன் காக்கா அவர்களுக்கு அன்புக்கட்டளை இட்டிருந்த செய்தியை அப்போது நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஹாங்காங்கில் ஜெயாவின் ரசிகர்கள் கூட்டம் சிறிய அளவில் ஒரு உணவகத்தில் தேநீர் விருந்து அளித்ததோடு சரி.  எம்.ஜி.ஆரின் உத்தரவு அங்கு நன்றாகவே வேலை செய்தது.

யாசீன் காக்கா, கலைஞர் அவர்களுக்கும் நெருக்கமாகவே இருந்தார். கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து. முரசொலி செல்வத்தை தயாரிப்பாளராக்கி, “அஞ்சுகம் பிக்சர்ஸ்” என்ற பெயரில் “பிள்ளையோ பிள்ளை” (1972)  படத்தை தயாரித்தபோது அதற்கான செலவு மொத்தம் 15 லட்சம்.

பிரபலமாகாத ஒரு புதுமுகத்தை  வைத்து எடுக்கும் ஒரு படத்திற்கு  யார்தான் தாமாகவே முன்வந்து பண முதலீடு செய்வார்கள்..?

இப்படத்திற்கான செலவை முன்கூட்டியே வழங்கி விநியோக உரிமையை பெற்றது கிரசெண்ட் மூவீஸ், சேது பிலிம்ஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ், ராசி அண்ட் கோ இந்த மூன்றும்தான். இந்த மூன்று நிறுவனங்களிலும் யாசீன் காக்கா அவர்கள் பங்குதாரர்களாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தான சர்ச்சையில் துபாய் ETA நிறுவனத்தின் மேலாளர் சலாஹுத்தீன் அவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்ற புகார் எழுந்தபோது,  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா “பிள்ளையோ பிள்ளை” படம் எடுக்கப்பட்ட அந்தக் கால கதையை மறுபடியும் நினைவுபடுத்தி, சூசகமாகச் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை 2010-ஆம் ஆண்டு கோவை பொதுக்கூட்டத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.

ஜெயா இந்த கதையை இப்போது வெட்ட வெளிச்சம் ஆக்கியதற்கு பழைய “உலகம் சுற்றும் வாலிபன்” நிகழ்வும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

சர்க்காரியா கமிஷன் விசாரணையின்போது, எத்தனையோ சாட்சிகளில்  யாசீன் காக்காவும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். உண்மையே பேசி பழக்கப்பட்ட யாசீன் காக்கா சர்க்காரியா கமிஷன் முன்பு வழங்கிய வாக்குமூலம் இதுதான்.

“சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன்.  எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”

அவரது இந்த வாக்குமூலம் அரசியல் வானில் ஒரு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியது.  இச்செய்தி 31.03.2011 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் மாலைமலர் நாளிதழ்கள் வெளியிட்டு மீண்டும் பெரும் பரபரப்பை உண்டு பண்ணின.

ஒருமுறை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுடைய மகன் திருமணைத்தின்போது கங்கை அமரனின் கச்சேரி ஏற்பாடு செய்யப்படிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது மக்கள் திலகம் வந்திருந்தார். வந்த சிறிது நேரத்திலேயே புறப்படவிருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து “கச்சேரி கேட்டுட்டு போங்களேன்” என்று கங்கை அமரன் சொல்ல,  “எவ்வளவு நேரம் கச்சேரி நடக்கும்?” என கேட்டிருக்கிறார். கங்கை அமரன் கையில் கைக்கடிகாரம் எதுவும் கட்டியிராததை கவனித்துவிட்டு, கங்கை அமரனின் கைகளை தாங்கிப் பிடித்த எம்.ஜி.ஆர். தனது வலது கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த “ஒமேகா” வாட்சை பரிசாக அளித்திருக்கிறார். ஒரு பேட்டியில் இன்னமும் பத்திரமாக அந்த கைக்கடிகாரத்தைப் பாதுகாக்கிறேன் என்று பெருமையாக கங்கை அமரன் கூறியிருக்கிறார்.

%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d

– — நாகூர் அப்துல் கையூம்

—– 27.10.2016

இந்திராகாந்தி அம்மையாரும் சிராஜுல் மில்லத்தும்

samad

இன்று எதிர்பாராதவிதமாக ”சிராஜுல் மில்லத் சிந்தனைகள்” என்ற தலைப்பில் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் தொகுத்த தலையணை சைஸ் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த வேளையில், இந்திராகாந்தி அவர்களுக்கும் அப்துல் சமது அவர்களுக்குமிடையே ஏற்பட்ட சந்திப்பின்போது ஏற்பட்ட (இந்த நேரத்திற்கு தேவைப்படும்) இந்த நிகழ்வு என் கண்ணில் பட்டது.:

சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாகிப் அவர்களின் எழுத்தில் சொல்லப்படும் இதோ அச்சம்பவம் :

முஸ்லீம்களுடைய தனியார் சட்டம் என்று சொல்லப்படும் ஷரீஅத் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென முஸ்லீம்களுக்கு விரோதமான ஒரு கூட்டத்தினர் இடைவிடாமல் முயன்று வருகின்றனர். இதற்கு இந்திரா காந்தி அம்மையார் இணங்காததைக் கண்ட சிலர், நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மறைமுகமான சில வழக்குகளைத் தொடர்ந்து, ஷரீஅத் சட்டத்திற்கு முரண்பட்ட தீர்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள்.

விவாக விலக்கு தரப்பட்ட பெண்ணுக்கு, “இத்தா” காலம் முடியும் வரை கணவன் சம்ரட்சணை தரவேண்டுமென்பதுதான் ஷரீஅத் சட்டம். ஆனால் அப்படி விவாகரத்து பெற்றுவிட்டாலும், அந்தப் பெண் மறுவிவாகம் செய்யும் வரை அல்லது இறந்து போகும் வரை சம்ரட்சணை தரவேண்டுமென உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு வழக்கில் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதைப் பற்றி பிரதமரிடம் எடுத்துரைக்க வேண்டும் என “முஸ்லீம் பர்சனல் லா போர்டு” நிர்வாகக் குழுவில் முடிவு எடுத்தோம். ஆனால் அது நாடு பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்த வேளை. பஞ்சாப் கலவரம் ஒருபுறம்; இலங்கை படுகொலை மற்றொருபுரம், நாடாளுமன்ற மக்கள் அவையில் அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்மொழியப் பட்டிருந்த நாள்.

என்றாலும் மாலை 5 மணிக்கு எங்களைச் சந்திக்க அம்மையார் நேரம் தந்திருந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் இலங்கை பிரச்சினை பற்றி மக்கள் அவையில் அவர் பதிலளிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் மக்கள் அவையில் அமர்ந்திருந்தோம். இலங்கை பற்றிய அறிக்கை தந்துவிட்டு எங்களைச் சந்திக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் சரியாக 5 மணிக்கு இருக்கையிலிருந்து திடீரென தம் அறைக்கு விரைந்து சென்றார்கள். நாங்களும் அவர் பின்னால் ஓடினோம்.

பிரச்சினையை எடுத்துக் கூறிய போது ஒரு விநாடியில் புரிந்துக் கொண்டு, “அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஷரீஅத்தில் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ தலையிடவே மாட்டோம். இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் வந்த நிலை. இத்தகைய தீர்ப்புகளினால் நீங்கள் மட்டுமல்ல; அரசாங்கமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதற்காக அரசு சார்பாக செய்ய வேண்டிய முயற்சிகளை நான் செய்வேன்” என்று உறுதியளித்தார்கள்.

சிறுபான்மை மக்களுடைய குறைபாடுகளைப் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டபோதெல்லாம், மெத்தப் பரிவுணர்ச்சியோடு அவரைக்கேட்டு பரிகாரங்கள் செய்த எத்தனையோ நிகழ்ச்சிகளை நான் நினைவுகூற முடியும்.

“மணிவிளக்கு” – நவம்பர். 1984

பின்குறிப்பு:

ஒரு சில எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்கிய இந்திரா காந்தி அம்மையார், குறித்த நேரத்தில் (இக்கட்டான அரசியல் சூழ்நிலையின் போதும்), அவையிலிருந்து எழுந்து போய் , அவர்களைச் சந்தித்து சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக பேசி ஆறுதல் அளித்தது ஒருபுறம்…………………

நாட்டையே உலுக்கும் காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுகவின் அத்தனை எம்.பி.க்களும் (A party with third largest number of MPs in the Parliament) பிரதமரைச் சந்தித்து முறையிட சென்றபோது அவர்களை சந்திக்கவும் வாய்ப்பளிக்காத மதிப்பிற்குரிய பிரதமர் மோடி மற்றொருபுறம். ………….

(அதே நாள் அல்லது அடுத்த நாள் கால் மேல் கால் போட்டு பேசிக்கொண்டிருக்கும் நடிகை காஜோலுடன் ஜாலியாக பிரதமர் அரட்டை அடித்துக் கொண்டிருந்த படமும் பத்திரிக்கையில் வெளியானது)

இந்த இரண்டு ஆளுமைகளின் பண்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

(பி.கு. நான் காங்கிரஸ்காரனோ அல்லது காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தையும் ஆதரிப்பவனோ கிடையாது)

கேட்கக்கூடாத கேள்வி

நாளை ஹஜ்ஜுப் பெருநாள். என் மனைவி படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். கடல் பாசி, வட்டிலாப்பம். அடுக்கு ஜாலர், பெருநாள் பறாசாப்பம் என வகை வகையான பலகாரங்கள் அடுக்களையில் தயாராகிக் கொண்டிருந்தன.

வரவேற்பறையின் அலமாரியில் கலர் கலராக டின்னர் செட் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ‘மெலமைன்’ டின்னர் செட் நீல நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் ஏற்கனவே இருந்தது. அதுவல்லாமல் கறுப்பு நிறத்தில் பளிங்கிலான டின்னர் செட் விடாப்பிடியாக வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்குமுன் என் மனைவி அடம்பிடித்துக் கேட்க அதுவும் அட்டகாசமாக அலமாரியில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

“ஏற்கனவே இரண்டு டின்னர் செட் கைவசம் இருக்க எதற்காக இந்த மூன்றாவது செட்?” என்ற நியாயமான கேள்வியை எழுப்ப, நான்தான் தோற்றுப் போனேன்.

“உங்களுக்கு என்ன தெரியும்? பெருநாள் போன்ற விசேஷம் வந்தால் வீட்டுக்கு நாலு பேரு வருவாங்க. வீடுன்னு சொன்னா ஒண்ணுக்கு ரெண்டு டின்னர் செட் இருக்க வேண்டாமா?”

இரண்டு வருடத்திற்கு முன்பு என்னை மடக்கிய கேள்வி இதுதான்.

நாளை பெருநாள் என்பதால் வழக்கம்போல கடைசி நேர ஷாப்பிங்கிற்கு ரெடியாகிக் கொண்டிருந்தேன். என் மனைவி சொல்லச் சொல்ல லிஸ்டில் சேர்த்துக் கொண்டே போனேன்.

Condensed Milk, Caramel இப்படியாக ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டே போக கடைசியில் Disposable Plate, Disposable glass, Disposable Spoon, Disposable cup என்று வரிசையாக அயிட்டங்கள் இடம்பெற்றன.

நம்ம வாய்தான் சும்மா இருக்காதே. “நம்மகிட்டதான் இவ்வளவு டின்னர் செட் இருக்குதே. அப்புறம் எதுக்கு இந்த Disposable Plate?

முறைத்துப் பார்த்துவிட்டு மனைவி சொன்னாள். “ரொம்ப ஈசியா சொல்லீட்டீங்க. நாளைக்கு இவ்வளவு பேர்கள் வீட்டுக்கு வருவாங்க. அதையெல்லாம் எடுத்து யூஸ் பண்ண போட்டேன்னு வச்சுக்குங்க, யாரு எல்லாத்தையும் கழுவி வைக்கிறது. நீங்க கழுவி வைக்கிறீங்களா? சொல்லுங்க…?”

ஏண்டா கேட்டோம்னு ஆயிட்டுது. “சும்மாத்தான் கேட்டேன்” என்று அசடு வழிந்துவிட்டு சூப்பர் மார்க்கெடுக்கு ஓடினேன்.

ஓடுவதற்கு முன்பாக அலமாரிக்கு அருகில் சென்று சற்று நோட்டமிட்டேன். அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை பிளேட்டுகளும் என்னை பார்த்து கேலியாக சிரிப்பதுபோல் ஒரு உணர்வு.

“இந்த நோஸ்கட் உனக்குத் தேவையா?” என்று அதுகள் என்னைப் பார்த்து கேட்பது போலிருந்தது.

– அப்துல் கையூம்

பாலும்,தெளிதேனும் என் ஆசானும்

Gafoor Sahib

இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்

எனது ஆசான் ஹக்கனருள் பெற்ற இறையருட் கவிமணி அப்துல் கபூரின் சொக்கவைக்கும் வரிகளை ஆராய்ந்து அதற்கு விளக்கம் சொல்லப் போனால் பக்கங்கள் காணாது. ஒருவன் தகுதி வாய்ந்த கவிஞன் ஆக வேண்டுமெனிலும் அவன் கன்னித்தமிழ் காவியங்களையும் காப்பியங்களையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும் .அதைக் கசடறக் கற்று கரை கண்டிருக்க வேண்டும்.

அவனது எழுத்துக்களில் தாமாகவே அதன் பாதிப்புகள் பிரதிபலிக்கும். அதற்குப் பெயர் “காப்பியடித்தல்” என்பதல்ல. கற்றுணர்ந்த காவியங்களின் காமதேனு வெளிப்பாடு அது. சட்டியில் உள்ளது அகப்பையில் அதுவாகவே வரும்.

இக்கட்டுரையின் இறுதியில் நான் போற்றி மகிழும் என் பேராசிரியரின்  நான்கே நான்கு வரிகளை  மட்டும் ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன். அதற்கு முன் சில எண்ணச்சிதறல்கள்.

பண்டமாற்று முறை (Barter trade) பண்டைய காலத்தில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்த காலம். அச்சடித்த நாணயம் புழக்கத்தில் இல்லாத காலம். ஒளவையார் பேரம் பேசுகிறார். யாரிடம்? ஆனைமுகத்து விநாயகரிடம். என்ன பேரம் அது? நான் உனக்கு நான்கு பொருட்கள் கொடுக்கிறேன் அதற்கு பதிலாக நீ மூன்றே மூன்று பொருட்கள் தந்தால் போதும் என்று.  Very fair deal.

பால், தேன், பாகு, பருப்பு இந்த நான்கு பொருட்கள் தருகிறேன் அதற்கு பதிலாக சங்கம் வளர்த்த இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்  இந்த மூன்றே மூன்று மட்டும் கொடுத்தால் போதும் என்று வாயாடுகிறார். பேரம் பேசுவதில் பெண்களுக்கு நிகர் பெண்கள்தான் போலும். வீரத்திற்கு ஆண்கள். பேரத்திற்கு பெண்கள்.

அவ்வையின் காலம் எதுவென்றால் சோழநாட்டில் கம்பரும், ஒட்டக்கூத்தரும், புகழேந்தியும் வாழ்ந்துவந்த காலம்.  மதுரையில் கடைச்சங்கம் வீற்றிருந்த காலம்.

“முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் பெருமையுடன் போற்றி வளர்த்த பைந்தமிழ் மொழியில் எனக்கு புலமையைத் தா” என்றும் ஒளவையின் பாட்டுக்கு பொருள் கொள்ளலாம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா

இந்த பால், தேன், பருப்பு ‘மேட்டரை’ வடலூர் இராமலிங்க வள்ளலாரும் கையாளத் தவறவில்லை.

‘தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பருப்பும் தேனும் கலந்த கலவையை விடச் சுவையானவன் இறைவன்’ என்கிறார்.

பிறிதொருவிடத்தில்

வான்கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை

நான் பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே

தேன்கலந்து  பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்

ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்கிறார்.

“மணிக்கவாசகா! நீ எழுதிய திருவாசகத்தை நான் பாடும்பொழுது எப்படியிருக்கிறது தெரியுமா! கரும்புச்சாறு, தேன், பால் இவற்றை இனிக்கின்ற கனிகளோடு கலந்தால் எத்தனைச்சுவையாக, இருக்குமோ அப்படியொரு  இனிப்போ இனிப்பு” என்கிறார்.

பாரதிதாசனுக்கும் இதே உணர்வு ஆட்கொண்டிருக்கிறது. அவனும் சளைத்தவனல்ல. ஒளவையார்,  வடலூர் இராமலிங்க அடிகளார் இவர்களின் பாக்களை படித்து அவனும் பலாச்சுளையாய்ச்  சுவைத்தவன்தான் .

பாரதிதாசனின் வருணனை ஒரு படி மேல். பலாச்சுளை, கனிச்சாறு, தேன், பாகு, பால், இளநீர் இவையாவும் சுவைதான்.  யாரில்லை என்று சொன்னது?  அதைவிட இனிமையானது ஒன்று இருக்கிறதே ! அது என்ன தெரியுமா? அதுதான் தமிழ் என்கிறார்.

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்

பாகிடை ஏறிய சுவையும்,

நனிபசு பொழியும் பாலும் – தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும் – தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!

இப்போது இறையருட் கவிமணியின் வருணனைக்கு வருவோம். அவரது கற்பனை அவருக்கே உரித்தான வகையில் இருக்கிறது. பாரதிதாசன் தமிழுக்கு வருணித்ததை நம் பேராசிரியர் அவரது மனதைக் கவர்ந்த நபிகள் நாயகத்தை வருணிக்கிறார். நபிகள் நாயகத்தின் மொழியானது அவருக்கு கனியிடை ஏறிய சுளைபோல, பனிமலர் ஏறிய தேன் போல, நனிபசு பொழியும் பால் போல சுவையானதாக இருக்கிறதாம். “நாயக மாலை”யில் இடம்பெறும் 104-வது பாடலிது.

தேம்பலாவின் சுவைபோலத்

தெவிட்டாத தேன்போல

மேம்பாலின் சுவைபோல

மேன் மொழியின் நாயகமே!

வெறும் நான்கே வரிகள்தான்  இந்த நான்கு வரிகளில் ஒளவையார் முதல் பாரதிதாசன்வரை , அவர் படித்த அனைத்து இலக்கியங்களை அவர் பிரதிபலிக்கின்றார். நபிகள் நாயகத்தின்  மீது அவர் வைத்திருக்கும் தீராத பற்று எப்படிப்பட்டது என்பதையும் இவ்வரிகள் நமக்கு உணர்த்துகிறது. தொட்ட அனைத்து ஊறும் மணற்கேணியாய், கற்ற அனைத்துயும் நம் கண்முன் கவிஞர் அப்துல் கபூர் சாகிப் அவர்கள் கொண்டு வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

–              அப்துல் கையூம்.