இஸ்லாமியக் கவிதைகள்

கொரோனா எந்த மதம்?

சீனத்திலிருந்து வந்த கொரோனா
எந்த மதம் எனக்குத் தெரியாது !

இந்துவா? முஸ்லிமா?
கிறித்துவமா? புத்த மதமா?
எதுவுமே எனக்குத் தெரியாது.

முஸ்லிம்கள்தான் பரப்பினார்கள் என்று
வாய் கூசாமல் பரப்பினார்கள்.

ஆனால் ஒன்று சகோ..

எரிக்க வேண்டிய உடல்களை எல்லாம்
இடுகாட்டில் புதைத்தார்கள் !

ஆண்கள் தாடி வளர்த்தார்கள் !
பெண்களும் ஆண்களும்
‘நகாப்’ அணிந்தார்கள் !

கூடவேயிருந்து மனைவிக்கு செய்யும்
பணிவிடையும் ‘சுன்னத்’தானே?

எங்கும் நிறைந்தவன் இறைவன்
என்பதை பறைசாற்றும் வண்ணம்
இல்லங்கள் யாவும் வழிபாட்டுத் தலங்கள் !

“சுத்தம் ஈமானில் பாதி”
கைச் சுத்தம் கால்சுத்தம்
காண்போரெலாம் கடைப்பிடித்தனர் !

விபச்சார விடுதிகள்
விடுமுறைகள் தந்தன !

ஆடம்பரக் கல்யாணங்கள்
அர்த்தமற்றுப் போயின !

கொரோனா எந்த மதம்?
எதுவுமே எனக்குத் தெரியாது

#அப்துல்கையூம்

பாரதியார் முஸ்லீம்களுக்கு எதிரானவரா..?

அண்மையில் ஒரு காணொளி பார்த்தேன். அதில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் இப்படியாக உரையாற்றுகிறார். அதாவது பாரதியாரை தமிழ்நாட்டில் வாழவே விடவில்லை என்பதால் அவர் காசிக்கு புறப்பட்டுச் சென்றாராம். அங்கு போய் காசி விஸ்வநாதர் கோயிலை பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சியொன்று காத்திருந்ததாம். காசி விஸ்வநாதரின் மூல விக்ரகத்தை எடுத்து கிணற்றில் போட்டுவிட்டு அங்கு பள்ளிவாயிலை கட்டி இருப்பதைப் பார்த்து வெகுண்ட பாரதியார் அக்கணமே

//பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டு வோம்//

என்று உணர்ச்சிபொங்க பாடினாராம்.

இந்த பாடல் சத்தியமாக பாரதியாருடையதுதான் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.. ‘பாப்ரி மஸ்ஜிதை’ இடித்தபோதும் கூட இதே பாடல் வரிகளைக் குறிப்பிட்டு மேடையில் பலரும் பிரசங்கமும் செய்து, நம் தொப்புள்கொடி உறவுகளின் உணர்வுகளை உசுப்பேற்றி விட்டனர். அதாவது பாரதி கண்ட கனவு இப்பொழுது நனவாயிற்று என்றனர்.

“இந்தியாவிலுள்ள பள்ளிவாசல்கள் அத்தனையையும் இடித்து விட்டு அங்கு கோயில் கட்டுவீர்களாக” என்று பாரதியார் பாடினார் என்பதை உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?

சாதி ஒழிய வேண்டுமென குரல் கொடுத்தவன், காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடியவன், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி பத்திரிக்கைகளில் தொடர்ந்து கட்டுரைகளாக எழுதித் தள்ளியவன், இஸ்லாமியர்கள் மீது இப்படியொரு வெறுப்புணர்வு கொண்டிருப்பானா என்பது நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயம்.

பாரதி அந்தக் கருத்தில் பாடவில்லை “கல்விக்கூடங்களை கோயில் போன்று புனிதமாக கருதுவோம்” என்ற பொருளில்தான் பாடினான் என்று சிலர் விளக்கமளிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த விளக்கமும் பொருத்தமானதாக இல்லை..

ஒரு கவிஞன் ஒரு பாடலை இயற்றும்போது “இடம், பொருள், ஏவல்” – அதாவது எந்தச் சூழ்நிலையில் இப்படியொரு கருத்தை முன்வைத்தான் என்பதை நாம் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

“சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி”

என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்படப் பாடல் நம் எல்லோருக்கும் தெரியும். கிட்டத்தட்ட இதே பொருளில்தான் பாரதியாரின் இப்பாடல் வரிகளும் அமைந்திருக்கின்றன.

“பள்ளி” என்பதற்கு பற்பல அர்த்தங்கள் உள்ளன. கல்விக்கூடம், சமணர்கள் படுக்கும் குகைகள், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம், படுக்கையறை, இவையாவும் “பள்ளி” என்ற வார்த்தைக்கு பொருள் கற்பிப்பதாகும்.

“உறக்கம்” என்ற இந்த வார்த்தையை ஒட்டியே பள்ளியறை, பள்ளியெழு, பள்ளியெழுச்சி, பள்ளிகொண்டான் போன்ற சொற்பதங்கள் அமைந்துள்ளன. “திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா” என்று ஜேசுதாஸ் பாடிய பாடல் என் நினைவுக்கு வருகிறது

//பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்// என்று பாரதி எந்த சூழ்நிலையில் பாடினான் என்பதை நாம் ஆராய்ந்தால் நம் ஐயத்திற்கான பதில் கிடைத்துவிடும்.

பாரதத்திற்கு விடுதலை கிடைத்தபின் நம் நாட்டின் INFRASTRUCTURE எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று பாரதி தொலைநோக்கு பார்வையோடு ஆலோசனை வழங்குகிறான்.

//வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் -எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்//

பாரதி சொல்ல வந்த கருத்துக்களை சற்று கூடுதல் தகவலுடனேயே நான் இங்கு விவரித்துள்ளேன்.

கார்கில் பகுதி மற்றுமல்ல ஹிமாச்சல பிரதேசத்திலும் நாங்கள் எங்கள் வீரர்களை பணியில் அமர்த்தி சீனாக்காரன் நமக்கு சொந்தமான இடங்களை ஆட்டையை போடாத அளவுக்கு பார்த்துக் கொள்வோம் என்பதற்காக “வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்” என்று பாடுகிறான்.

இலங்கை சிங்களவர்கள் நம் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளாமல் இருப்பதற்காக கடல் ரோந்து புரியும் COAST GUARD PATROL அமைப்போம் என்பதற்காக “அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்” என்கிறான்.

மலைப்பிரதேசத்தைப் பற்றி சொல்லியாகி விட்டது. கடல் பிரதேசத்தைப் பற்றியும் சொல்லியாகி விட்டது. மீதியிருப்பது நிலப்பகுதிதான். அதையும் சொல்லியாக வேண்டும் அல்லவா?

“பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்” என்கிறான் அதாவது தூங்கிக்கிடக்கும் தரிசு நிலங்களை – சும்மாக் கிடக்கும் நிலத்தைக் கொத்தி சோம்பல் இல்லாம ஏர் நடத்தி அந்த இடங்களை பயிரிட்டு பச்சைவெளியாக்கி புனிதம் சேர்ப்போம் என்கிறான்.

“பள்ளி” என்று பாரதி குறிப்பிடுவது பள்ளிக்கூடத்தையும் அல்ல, பள்ளிவாசலையும் அல்ல மாறாக தூங்கிக்கிடக்கும் தரிசு நிலத்தைத்தான் என்பது சற்று சிந்தித்துப் பார்த்தால் விளங்கும்.

பாரதம் விடுதலை அடைந்த பிறகு எப்படியெல்லாம் தன் நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற பாரதியின் தொலைநோக்கு பாடலில் வரும் வரிகளை இப்படித்தான் நான் பொருள் கொள்ள வேண்டும்.

//ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்// என்று அதே பாடலில் பின்வரும் வரிகளில் பாடுகின்ற அவன் அதே கருத்தை ஏன் இருமுறை பாட வேண்டும்?

“பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று அவன் சொன்னது தரிசு நிலத்தையும், வயற்காட்டின் புனிதத்தையும்தான் என்பது நமக்கு இப்போது தெளிவாகப் புரிகிறது.

“பள்ளி” என்ற சொற்பதத்தை இந்த பாடலில் மட்டும்தான் பாரதி பயன்படுத்தி இருக்கிறான் என்பதல்ல. “புயற்காற்று” மற்றும் “திருப்பள்ளி எழுச்சி” என்ற கவிதைகளிலும் இச்சொல்லை பயன் படுத்தியுள்ளான். திருப்பள்ளி எழுச்சியில் பாரத மாதாவை விளித்து

//இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய் !
ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே !//

என்று பாடுகிறான்.

முஸ்லீம்கள் மீது பாரதியார் துவேஷப்போக்கைக் கொண்டிருந்தார் என்ற ரீதியில் அர்ஜுன் சம்பத் சித்தரிப்பது அந்த புரட்சிக் கவிஞனின் மீது சகதியை அள்ளி வீசுவதற்குச் ஒப்பாகும். பாரதியாரை இதைவிட வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. சரித்திரத்தை மாற்றியமைப்போம் என்று அமித்ஷா சொன்னது இந்த அர்த்தத்தில்தானா என்று நம்மை சந்தேகம் கொள்ள வைக்கின்றது.

பாரதியார் பிறந்து வளர்ந்த ஊர் எட்டயபுரம். அந்த மண்ணிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. சீறாப்புராணம் யாத்த உமறுப்புலவர் வாழ்ந்த ஊரும் அதுவே. அங்கிருந்த முஸ்லீம் பெருமக்களுடன் இணக்கமான நட்பு கொண்டிருந்தவர் பாரதியார். பாரதியாரை பலரும் “தாடி ஐயர்” என்றே பட்டப்பெயரிட்டு அழைத்தனர்.

புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் பாரதியார் ஒரு முஸ்லீம் அன்பரின் கடையில் ஒன்றாய் அமர்ந்து தேநீர் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்.. புதுவையிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் முஸ்லீம்களுடன் நெருங்கிப் பழகினார் என்ற ஒரே காரணத்துக்காக அக்ரகாரத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டார்.

கடையம் பகுதியில் பாரதியாருக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் இருந்தனர். பொட்டல்புதூர் இனாம்தார், செய்யதுசுலைமான் போன்றவர்கள் அவருடன் நெருக்கமாக பழகினார்கள்.

1910-ஆம் ஆண்டு பிப்ரவரி 1 தேதியிட்ட விஜயா என்ற பத்திரிக்கையில்
‘முஸ்லீம்களின் சபை’ என்ற தலைப்பில் பாரதியார் எழுதிய கட்டுரையைப் படித்துப் பார்த்தால் அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எந்த அளவுக்கு வலியுறுத்தினார் என்பது நமக்கு புரியும்.

பாரதியார் ஆற்றிய சொற்பொழிவுகளில் நபிகள் பெருமானாருடைய பெயரை உச்சரிக்கும் நேரத்திலெல்லாம் “ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்” என்று அவர்களின் பெயரோடு “ஸலவாத்’ சொல்ல என்றுமே அவர் தவறியதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

அல்லாஹ்வைப்பற்றி அவர் பாடிய பாடல் வரிகளை ஆராய்ந்தால் இஸ்லாத்தைப் பற்றிய அவருடைய புரிதல் எந்த அளவுக்கு ஆழமாக இருந்தது என்பதை நாம் அறிந்துக் கொள்ள முடிகிறது..

//பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே!
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லா லும்மனத்தாலுந்தொடரொணாதபெருஞ் சோதி!
கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாத ராயினும் தவ மில்லாதவ ராயினும்
நல்லாருரை நீதி யின்படி நில்லாதவ ராயினும்
எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன்//

என எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புகழை அமுதமொழியில் அழகாக பாடுகிறான் அந்த பாட்டுக்கோர் புலவன்.

1920-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி ரவணசமுத்திரம் என்ற ஊரில் சின்னப் பள்ளிவாயிலுக்கு நேரெதிரே ஒரு பொதுக்கூட்டம், அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ஹாஜி முகமது மீரான் சாஹிப் ராவுத்தர் அவர்கள்.. பாரதியார் இக்கூட்டத்தில் பேசிய முழு உரையும் 18.3.1920 நாளிட்ட சுதேசமித்திரன் இதழில் வெளியானது.

1920-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி பொட்டல் புதூர் என்ற ஊரில் தெற்குப் புதுமனைத் தெருவில் முஸ்லிம் சங்கம் மற்றொரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது.

“இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை” என்ற தலைப்பில் பாரதியாரரின் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் பேச தொடங்குவதற்கு முன்பு திருமறை வசனங்கள் (கிரா-அத்) ஓதிய பிறகு “அல்லா அல்லாஅல்லா” என்று தானெழுதிய பாடலோடு தன் பேருரையைத் தொடங்குகிறார் பாரதியார்.

“நபிகள் பெருமானரைப் பற்றிய ஆங்கில அறிஞர் எழுதிய ஒரு நூல்தான் இஸ்லாத்தைப்பற்றி அறிந்துக்கொள்ள எனக்கு ஆவலைத் தூண்டியது. அவரது வரலாற்றைப் படித்து நான் மிகுந்த பரவசமுற்றேன்” என்று தன் அனுபவத்தை பகிர்கிறார். அதனைத் தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையில் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வை நயம்பட விவரிக்கத் தொடங்குகிறார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல இஸ்லாத்தின் மீது பாரதியார் கொண்டிருந்த அளவற்ற மதிப்பையும் மரியாதையும் எடுத்துக்காட்ட அவரது இந்த ஒரு சொற்பொழிவே போதுமானது.

இப்படிப்பட்ட ஒரு மனிதரை மததுவேஷியாக, இஸ்லாத்திற்கு எதிரான நபராக அர்ஜீன் சம்பத் போன்ற சங்கரிவார் நபர்கள் சித்தரித்துக் காட்ட முயல்வது வரலாற்றை திரித்துக் காட்டும் முயற்சிகளில் ஒன்று. இது இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் குலைத்து சமுகத்தைப் பிளவுபடுத்தும் நோக்கமன்றி வேறில்லை.

#அப்துல்கையூம்

 

 

தலையெழுத்து

என்ன லிபியோ
யாருக்கும் தெரியாது !

எழுதியிருப்பது என்னவென்று
எதுவுமே புரியவில்லை !

புரியாத மொழியில்
புலப்படாத கிறுக்கல்.

எழுத்தே தென்படாமல்
அது என்ன அபூர்வ மையோ..?

எழுதியதை மாற்ற
இயலாத மையாம் அது.

எழுதியதும் அவனே !
அழிப்பதும்அவனே !

தலையெழுத்து ……
உயிரினங்களுக்கு
மட்டும்தானா?

கான மயிலாட
கண்டிருந்த வான்கோழியாய்
மனிதனும் எழுத
முற்படுகிறான்

மகிழ்வுந்துக்கு
எண் பலகை !

ஊர்களுக்கு
பின்கோடு !

நேற்றிவன் வைத்த
என் வீட்டு எண்
பழைய எண் ஆகி
இன்று புதிய எண்ணாக
பரிணாமித்து விடுகிறது.

ஆனால் …
ஒரே ஒரு வித்தியாசம் !
இவனெழுத்து மாறி விடுகிறது.
அவனெழுத்து மாறுவதும் இல்லை;
பொய்யாவதும் இல்லை !!!

#அப்துல்கையூம்
நவம்பர் 9, 2007

நிரந்தர விலாசம்

சிறிய இடம்தான் என்றாலும்
நமக்கே சொந்தமாகி விடுகிறது.
விலைக்கிரயம் கிடையாது
மனைப்பட்டா கிடையாது
நிலப்பதிவு செய்ய
சார்பதிவு அலுவலகம் போகவேண்டிய
அவசியமும் கிடையாது.

புழுக்கம் இருக்கும் ஆனால்
மின் விசிறி தேவையிருக்காது
வெளிச்சமிருக்காது ஏனெனில்
சாளரங்கள் கிடையவே கிடையாது

வசதிகள் கிடையாதுதான் – ஆனால்
அதுவே நமக்கு போதுமானது
விருந்தினர் தொல்லை இல்லை
உறவுக்காரர்களின் பிடுங்கல்கள் இல்லை
புள்ளைக்குட்டி தொந்தரவு கிடையாது
நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருக்கலாம்

அந்த இடத்துக்கு அப்படி என்னதான்
வசீகரமோ தெரியாது எனக்கு.
அங்கு போவதற்குத்தான்
ஒவ்வொருவரும் கிடந்து சாகிறார்கள்

ஆம்..
மண்ணறை விசாலம் இல்லைதான்
ஆனால் மண்ணறைதான் நம் விலாசம்

#அப்துல்கையூம்

இறைவனும் கணக்கியலும்

உலகின் மிகச்சிறந்த
பட்டய கணக்காளன் யாரென்றால்
இறைவன்தான்.

இவனது
கணக்கியல் நிறுவனத்திற்கு
கூட்டாண்மை கிடையாது

கணினி இல்லை
கணக்கியல் மென்பொருளில்லை
கணிப்பொறி இல்லை
பேரேடு இல்லை
என்றாலும்
கணக்கு வழக்குகள் யாவும்
கனக்கச்சிதம்தான் போங்க..

அவனுக்கு விரல்கள் இல்லை
ஆனாலும் வரவுச் செலவு கணக்கு
அவன் விரல் நுனியில்

அறிவைக் ‘கூட்டி’
பாவங்களை ‘கழித்து’
வாழ்க்கைப் பாதையை ‘வகுத்து’
செல்வத்தை ‘பெருக்கி’
சீராக வாழ வழிகாட்டும் கணக்காளன்.

ஐவேளைத் தொழுகைதான்
அவன் ஐந்தொகை கணக்கு
என் நன்மைகளின் வைப்புத்தொகை
அவனுக்கு மட்டுமே தெரியும்

நன்மைகளை வரவில் வைக்கவும்
பாவங்களை செலவில் சேர்க்கவும்தானே
நம் ஒவ்வொருவரின் விருப்பமும்
விண்ணப்பப் படிவமும்.

இங்கு காலி செய்துவிட்டு போகையில்
கடனாளிகள் பேரேட்டில்
நம் பேர்கள் இருக்கவே கூடாது

இறைபக்தியே மூலதனம்.
நன்மைகளே மதிப்புயர்வு
நம் வயதே தேய்மானம்
அவனது அருளே ஈவுத்தொகை
அதுவே நமக்கு முகமதிப்பு
இறுதிக் கணக்கே அவன் தீர்ப்பு

#அப்துல்கையூம்

அருஞ்சொற்பொருள்:

கணக்கியல் : Accountancy
பட்டய கணக்காளன் : Chartered Accountant
ஐந்தொகை: Balance Sheet
கூட்டாண்மை: Partnership
கணிப்பொறி: Calculator
பேரேடு : Register
வரவுக்கணக்கு: Credit Account
செலவுக்கணக்கு: Debit Account
மூலதனம்: Capital
மதிப்புயர்வு: Appreciation
தேய்மானம் : Depreciation
ஈவுத்தொகை: Dividend
முகமதிப்பு: Face Value
இறுதிக்கணக்கு: Final Account

நிரந்தர விலாசம்

சிறிய இடம்தான் என்றாலும்
நமக்கே சொந்தமாகி விடுகிறது.
விலைக்கிரயம் கிடையாது
மனைப்பட்டா கிடையாது
நிலப்பதிவு செய்ய
சார்பதிவு அலுவலகம் போகவேண்டிய
அவசியமும் கிடையாது.

புழுக்கம் இருக்கும் ஆனால்
மின் விசிறி தேவையிருக்காது
வெளிச்சமிருக்காது ஏனெனில்
சாளரங்கள் கிடையவே கிடையாது

வசதிகள் கிடையாதுதான் – ஆனால்
அதுவே நமக்கு போதுமானது
விருந்தினர் தொல்லை இல்லை
உறவுக்காரர்களின் பிடுங்கல்கள் இல்லை
புள்ளைக்குட்டி தொந்தரவு கிடையாது
நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருக்கலாம்

அந்த இடத்துக்கு அப்படி என்னதான்
வசீகரமோ தெரியாது எனக்கு.
அங்கு போவதற்குத்தான்
ஒவ்வொருவரும் கிடந்து சாகிறார்கள்

ஆம்..
மண்ணறை விசாலம் இல்லைதான்
ஆனால் மண்ணறைதான் நம் விலாசம்

#அப்துல்கையூம்

போனஸ் இரவு

%e0%ae%a4%e0%af%81%e0%ae%86

(2014-ஆம் ஆண்டு ரமலான் மாதத்தின்போது நானெழுதிய கவிதை இது)


தாம்பரம் அருகில்
தவணை முறையில்
தனிமனை விற்பனை
தாங்க முடியாத கூட்டம் ..!

சரவணா ஸ்டோரில்
சகாய விலையில்
சிறப்புத் தள்ளுபடியாம்
செமையான கூட்டம்…!

சேதாராம் இல்லையாம்..!
செய்கூலி இல்லையாம்..!
கல்யாண் ஜுவல்லர்ஸில்
கட்டுக்கடங்காத கூட்டம்…!

ஆண்டுக்கொருமுறை
ஆடித் தள்ளுபடியாம்
ஹனீபா டெக்ஸ்டைல்ஸில்
அலைமோதும் கூட்டம்…!

நல்ல நல்ல வாய்ப்பை
நழுவ விட்டால்
நான்தான் நஷ்டவாளியாம்
நண்பன் சொன்னான்.

வா நண்பா!
பள்ளிவாயில் செல்வோம்.
ஒரே இரவில் ஓராயிரம் போனஸ்.
இன்றுலைலத்துல்கத்ர்இரவு

அப்துல் கையூம்


(“
லைலத்துல் கத்ர்” = ஆண்டவனால் திருமறை அருளப்பட்ட இரவு. ஆயிரம் மாதங்களுக்கு இணையான புண்ணியம் சேர்க்கும் இரவு)

நன்றிக் கடன்

dua

படுக்கப் பாய் கேட்டேன்
பஞ்சணை தந்தாய்!

பசிக்கு கூழ் கேட்டேன்
பாயசமே தந்தாய்!

வசிக்க குடில் கேட்டேன்
வசதியான மாளிகை தந்தாய்!

அணிவதற்கு கந்தல் கேட்டேன் 
துணிக்கடையையே அள்ளித் தந்தாய்!

கேட்டதெல்லாம் கொடுத்தாய்
கேட்க மறந்ததையும் கொடுத்தாய்!

மாறாக நடந்தபோதும் 
மன்னிப்பையே அருளினாய்!

நேர்வழியில் தவறியபோதும்
நிறைவான வாழ்க்கையை நீட்டித்தந்தாய்!

பாவக்கடலில் நீந்தியபோதும்
படகைத்தந்து கரைசேர்த்தாய்!

எத்தனை சிறிய வாழ்க்கைத் தடம்?
எப்படி செலுத்துவோம் இத்தனை நன்றிக்கடன்?

இறைவா! 
இதற்காவது எங்கள் வாழ்வை 
இன்னும் கொஞ்சம் நீட்டித்தர மாட்டாயா?

அப்துல் கையூம்

ஒட்டுத்துணி அரசர்

யார் இவர்?

சுட்டெரிக்கும் சூரியன் – அவர்
பட்டு மேனியைச்
சுட்டுவிடுமோ என்று

நடைபயின்ற நாயகத்தை
குடைபிடித்த மேகத்தை
இடை மறித்து கேளுங்கள்
விடையைக் கூறும் !

* * *

யார் இவர்?

வானில் உலாவரும்
வண்ண நிலவை
வழிமறித்துக் கேளுங்கள்

தன்
தேகத்தையே இருகூறாய்
வகிர்ந்துக் காட்டும் ..

பிளந்துக் காட்டியதே – அந்த
பெருமான்தான் என
பெருமை கொள்ளும் !

* * *

யார் இவர்?

எச்சிலை வலையாய்ப் பின்னி
எதிரிகளிடமிருந்து
ஏந்தலைக் காப்பாற்றிய
எட்டுக்கால் பூச்சியை
எதிர்க்கொண்டு கேளுங்கள்

அந்த
ஈருலக அரசர்
யாரென்ற உண்மையை
பாரறிய பறைசாற்றும் !

* * *

எந்தத்
திருப்பெயரை செவிமடுக்கையில்
பெருவிரலின் நகக்கண்கள்
இருகண்களில் முத்தம் பதிக்குமோ
அந்தப் பெயருக்குச்
சொந்தக்காரர் இவர்

மதுரமான இப்பெயரை
அதரங்கள் உச்சரிக்க
சதிரமெலாம் பூரிக்கும்

இந்த
வீரிய விதை
பூமியில் விழுந்ததால்
இசுலாமெனும் ஆலமரம்
விசுவரூபமெடுத்து
விருட்சமாகியது

இவர்
கால் பதித்த இடமெல்லாம் – இன்று
கனிம வளம்

பாதங்கள் பட்டதினால்
பாலைவனமெல்லாம்
சோலைவனம்

* * *

இரத்தினக் கற்களை
ஆபரணமாக்கி
ஆடம்பரமாய் வாழ்ந்த
அரசர்களுக்கு மத்தியில்
பாடாய்ப்படுத்திய
பசியினைப் போக்க
பாரக்கற்களை கட்டிக்கொண்ட
பரந்த தேசத்து பேரரசர் இவர்

 

 

* * *

இவர்
செங்கோல் செலுத்திய
ஆட்சியின் மாட்சியை
ஏட்டில் வரைத்திட
எழுதுகோல் காணாது

எடுத்துரைக்க
எஞ்சியுள்ள வாழ்நாளும்
எமக்குப் போதாது

சரித்திர நாயகர்களில்
இவருக்குத்தான்
முதலிடம்

வரலாற்று பக்கங்கள் –
வரிந்து வந்து
திறந்த நெஞ்சில் – இவரது
வாழ்நாட் சாதனையை
பச்சை குத்திக் கொண்டதோ?

* * *

ஒரு விடியலைத் தந்த
குளிர் நிலவு இது

இறைவனின் தூது
இவரால்தான் நிறைவு

இவரது
அரியாசனத்திற்கு
சரியாசனம் .. ..?
ஊஹும் ..
எதுவும் கிடையாது

அண்டவனின்
அருள் மழையில்
அருட் கொடையாய்
வந்த மழைத்துளி

அகிலமே இதில் நனைந்தது
ஆதாயம் தேடி

இவரது உபதேசம்
சென்றடைந்தது பலதேசம்

இவரது இறைபோதம்
பாவக்கறைகளை
போக்கிவிடும் சவுக்காரம்

* * *

பாரசீக சல்மானையும்
ரோம நாட்டு சுஹைலையும்
அபிசீனிய பிலாலையும்
அன்பால் ஈர்த்த
ஐக்கியப் பேரவையின்
அதிபர் இவர்.

சர்வதேச பேரவையின் – இந்த
சர்தாரின் விரலசைப்பிற்கு
சகல உடமைகளையும்
சத்திய வழியில்
தியாகம் செய்தனர்
திண்ணைத் தோழர்கள்.

“இறைவனும்
இறைவனின் தூதரும்
இருப்பது போதும்” என்று
இருந்த செல்வம்
எல்லாவற்றையும்
ஈந்து மகிழ்ந்த அபூபக்கரின்
ஈடற்ற அன்புக்கு
உரித்தானவர் இவர்

எந்தப் பல் வீழ்ந்ததென்று
ஏதும் அறியாது – தன்
சொந்தப் பல் அத்தனையும்
ஒவ்வொன்றாய் தகர்த்துக்கொண்ட
உவைசுல் கர்னியின்
உண்மையான அன்புக்கு
உவப்பான மனிதரிவர்

* * *

அழுது அழுது
பழுதான கண்கள்
தொழுது தொழுது
துவண்டுப்போன கால்கள்

படைத்தவனுக்கு முன்
பதைபதைத்த – இந்த
பரிசுத்துவானின்
பயபக்திக்குமுன்
பாவமூட்டைகளைச் சுமக்கும்
நம் இறையச்சம் எம்மாத்திரம்?

“பகலவனை ஒருகையில்
பால்நிலவை மறுகையில்
பகிர்ந்தெமக்குத் தந்தாலும்
பற்றியுள்ள கொள்கையினை
சற்றும் விடமாட்டோம்” என்று
சூளுரைத்த சீலர்

* * *

எஃகைக் காட்டிலும்
இறுக்கம் கொண்ட
ஈமான் பலம் கொண்ட
கோமானின் நெஞ்சம்
இலவம் பஞ்சைக் காட்டிலும்
இலகிப்போன உள்ளம்.

ஆருயிர் சிறிய தந்தை
வீரமிகு ஹம்ஸாவின்
மாரைப் பிளந்து
ஈரற்குலையை எடுத்துருவி
ஆரமாக்கி அணிந்து
ஆனந்தக் கூத்தாடிய
அல்லிராணி ஹிந்தாவை
அன்போடு மன்னித்த
அண்ணலாரின் இதயம்
அகிலமே வியக்கும் அதிசயம் !

* * *

ஹீரா குகை தவசி
சீறா புகழ் குறைஷி
வாராது வந்த மாமணி – இந்த
பாருலகம் போற்றும் மாமுனி

இறைமறைக்கு
விளக்கவுரை
எழுத நினைத்த இறைவன் – அதை
இரத்தமும் சதையாக்கி
இரசூலை அனுப்பினான் போலும்.

* * *

ஆறடி அகலம்
ஏழடி நீளம்
அரபகம் ஆண்ட இந்த
அண்ணலாரின் உறைவிடம்

உடுத்த ஒரு அங்கி
உலர்த்த ஒரு அங்கி
ஒட்டுத்துணி உடுப்பு
ஒன்றோ இரண்டோதான்
இவரது வஸ்திரம்

காலடியில்
பொக்கிஷங்கள் கிடந்தபோதும்
காய்ந்த ரொட்டிதான்
இவரது வஜீபனம்

ஓலைப்பாயே இவரது
சிம்மாசனம்

பள்ளிவாயிலே
தலைமைச் செயலகம்

வீட்டுத் திண்ணையும்
ஈச்ச மரத்தடியும்தான்
நாட்டை ஆண்ட இம்மன்னரின்
கோட்டை கொத்தளம்

தானே துணிதுவைத்து
தானே தையலிட்டு
தானே பால் கறந்த
தானைத் தலைவரை
நானிலமே வியக்கிறது !

பாதுகையை செப்பனிட்ட
பாதுஷாவை
படித்ததுண்டோ வரலாற்றில்?

எளிமையே இனிமையென
இன்பம் கண்டவர்
இவர்போல் எவருளர்?