இன்று GAP என்ற புகழ்ப்பெற்ற Branded Store-க்கு சட்டை எடுக்கச் சென்றேன். இதுவும் GAP பற்றிய பதிவுதான், கேப் என்பது வேறு. கேப்மாரி என்பது வேறு, Just for your information. அந்தக் காலத்திலேயே எதுக்கு எவ்வளவு கேப் வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள்.
இடைவெளியைப் பற்றி நம் அரசாங்கமும் ஒரு காலத்தில் மிகவும் கவலைப்பட்டது. இரண்டு குழந்தைகளுக்கிடையே போதுமான இடைவெளி வேண்டும் என பரவலாக விளம்பரம் செய்தார்கள்.
டார்ஜான் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். நீண்ட நெடிய மரத்தில் தொங்கிக் கொண்டே தாவித் தாவி காடு முழுவதையும் கடந்து விடுவான் டார்ஜான்.
ஒரு தென்னை மரத்தை நடுகையில் ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் எவ்வளவு GAP (இடைவெளி) விட வேண்டும் என்ற நுணுக்கத்தை நம் முன்னோர்கள் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள். எத்தனை சென்டி மீட்டர் இடைவெளி விட வேண்டும் என்று வேண்டுமானால் அவர்களுக்கு சொல்லத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதை அழகாக அவர்களுக்கு சொல்லத் தெரிந்திருந்தது. கவித்துவமாக எடுத்துரைக்க கற்றிருந்தார்கள்.
ஒரு தென்னை மரத்திற்கும் மற்றொரு தென்னை மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் தெரியுமா? அணில் தாவா இடைவெளி விட வேண்டுமாம். அதாவது ஒரு தென்னை மரத்திற்கும் மற்றொரு தென்னை மரத்திற்கும் அணில் தாவ முடியாத அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும் என்பது அவர்கள் வகுத்த நியதி.
ஆயிரம் தென்னைமரம் வைத்திருக்கும் ஒரு விவசாயியின் சொத்தானது ஐந்து மன்னர்களின் சொத்துக்குச் சமம் என்பார்கள்
‘நண்டு ஓட நெல் நடணும்;
நரி ஓட கரும்பு நடணும்;
வண்டி ஓட வாழை நடணும்;
தேர் ஓட தென்னை நடணும்’
நாற்று நடுகையில் நண்டு புகுந்து ஓடும் அளவுக்கு GAP தேவையாம். கரும்பு நடுகையில் நடுவில் நரி புகுந்து ஓடும் அளவுக்கு GAP வேண்டுமாம். வாழைமரம் நடுகையில் நடுவில் மாட்டு வண்டி உருண்டோடும் அளவுக்கு GAP இருக்க வேண்டுமாம். கடைசியில் தென்னை. இரண்டு தென்னைகளுக்கும் இடையில் ஒரு தேரே ஓடும் அளவுக்கு GAP வேண்டுமாம்.
அடேங்கப்பா !! அப்படியென்றால் ஆயிரம் தென்னை நடுமளவுக்கு வசதி படைத்த விவசாயியின் நிலத்தின் பரப்பளவு எத்தனை ஏக்கர் இருக்கும் என்று நீங்களே கணக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.
எப்படியோ கிடைத்த கேப்பில் ஒரு நல்ல செய்தியைச் சொல்லியாச்சு. இதுக்குப்பேருதான் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது என்பதோ?
